Featured post

Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow.

 Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow Kollywood masala entertainer Har...

Wednesday 19 April 2023

தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும்

 *தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது: கார்த்தி பெருமிதம்*


*இன்று காலை சென்னையில் நடைபெற்ற சிஐஐ தக்‌ஷின் விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கார்த்தி கலந்துக் கொண்டு பேசியது:*





தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், சிஐஐ தலைவர் மற்றும் என் அன்பு நண்பர் திரு சங்கர் வானவராயர் மற்றும் இன்று கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்.


தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும்  இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது. சென்னையின் கரைகளை சினிமா எப்போது தொட்டதோ, அப்போதிலிருந்தே மேடை நாடகத்தின் உச்ச நட்சத்திரங்களான பி.யு.சின்னப்பா,  எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் அவரது மனைவி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்டோரை உடனடியாக தன்பால் ஈர்த்துக் கொண்டது. 


தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அதன் கதைகள் பெரும்பாலும் நமது புராணம் மற்றும் கற்பனைக் கதைகளை ஒட்டியே இருந்தது. முதல் பல வருடங்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் 68 மேடை நாடகங்களிலிருந்தே, தமிழில் உருவான சினிமாக்களின் கதைகள் இருந்தன. ஆரம்ப நாட்களில் மொழி எல்லைகளைத் தாண்டி பேசப்பட்ட முதல் படங்களில் ஒன்று, தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்ட எஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட படைப்பான சந்திரலேகா. வைஜெயந்தி மாலா என்ற நடிகை நட்சத்திரமாக ஆனார். ஏவிஎம் நிறுவனம் அவரை அறிமுகப்படுத்தியது. அப்போதே எல்லைகளைக் கடந்து புது ரசிகர்களை நோக்கி நட்சத்திரங்கள் சென்று கொண்டிருந்தனர். 


இருப்பினும் 50 மற்றும் 60 களில் திரைப்படங்கள் சமூகம் மற்றும் குடும்பச் சூழலை ஒட்டிய கதைகளைச் சொல்ல ஆரம்பித்த போது, உண்மையாகவே எல்லைத் தாண்டிய தாக்கத்தைப் பார்க்க முடிந்தது. அதாவது மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் ரீமேக் செய்யப்பட்டன. இளங்கோவன், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோரின் சக்திவாய்ந்த வசனங்களும், அதற்கேற்ப நடிகர்களின் நடிப்பும் அவர்களின் செல்வாக்கை அதிகரித்து, அதன் மூலம் அவர்கள் நம் உயர்ந்த மாநிலத்தின் முதல்வராகவும் வழி வகுத்தது. சினிமாவின் வலிமை இதுவே. 


எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் 1954-ல் இந்தியில் ஆசாத் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் வெளியான பாபி படம் 1956ல் தமிழில் குலதெய்வம் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. வஞ்சி கோட்டை வாலிபன் 1958 ஆம் ஆண்டு ஹிந்தியில் ராஜ் திலக் என்ற பெயரில் வெளிவந்தது. இப்படி இந்தப் பட்டியல் இன்னும் நீளும்... இன்று வரை தமிழ் படைப்புகள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, மொழி மாற்றம் செய்யப்பட்டு, அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், அதன் அழகியலையும் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.


தமிழ் சினிமா எப்போதுமே நம் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. அது எப்போதும் பொழுதுபோக்கிற்காக என்று மட்டும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாமல், பல சமூக பிரச்சனைகளையும் பேசியுள்ளது. உதாரணமாக கே பாலச்சந்தர், ருத்ரய்யா மற்றும் பாலு மகேந்திரா போன்ற இயக்குநர்கள் நம் சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல்  குறித்த வார்ப்புருக்களை அமைத்துள்ளனர். வெள்ளித்திரையில் சுதந்திரமான மற்றும் துணிச்சலான இளம் பெண்ணை அவர்கள் சித்தரித்த விதம் இன்றளவும் பொருத்தமாக உள்ளது. 


கமல்ஹாசன், மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஷங்கர் மற்றும் ஏஆர் ரஹ்மான் போன்ற படைப்பாளிகளின் வருகை புதிய யுக சினிமாவின் உதயத்தை அறிவித்தது. வலுவான, தைரியமான கரு, காட்சிகள் மூலம் கதை சொல்லும் விதம், மேம்பட்ட ஒலி வடிவமைப்பு என திரைப்பட உருவாக்கத்தை புதிய பாதைக்கு இட்டுச் சென்று பரந்துபட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றினர். தங்களின் அசத்தியமான, கவர்ச்சிகரமான இருப்பின் மூலம் எங்கள் சூப்பர் ஸ்டார்கள் திரைப்பட வணிகத்தின் எல்லைகளை விரிவாக்கினர். 


தொலைநோக்குச் சிந்தனையும், நவீன திரைப்பட உருவாக்க நுட்பமும் இன்றுவரை தொடகிறது. அதே வேளையில், நம் திரைப்படங்களின் தேர்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவம், இங்கிருக்கும் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களை இந்தியாவின் மற்ற மொழித் திரைத்துறையினர் நாடி வருவதற்கு முக்கியக் காரணியாக இருந்துள்ளது. 


சிறந்த திறமையாளர்களின் நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளதில் தமிழ் திரையுலகம் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், உலகம் முழுவதும் உள்ள சிறந்த திறமையாளர்களைப் பயன்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். புடாபெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் உள்ள சிம்பொனி இசைக் கலைஞர்கள், எங்கள் சொந்த இசை வித்தகர்களான இளையராஜ, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களால் எழுதப்பட்ட இசையை இசைத்துள்ளனர். வெளிநாட்டு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எண்ணற்றோர் எங்கள் தமிழ் படங்களில் பங்கெடுப்பதைப் இப்போதே பார்க்க முடிகிறது. 


தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறை பரிணாம வளர்ச்சியடைந்து, நாள் ஆக ஆக இன்னும் பண்பட்டே வருகிறது. நுணுக்கமான களன்கள், வழக்கமான பாதையில் பயணிக்காத திரைக்கதைகள், சமூகத்தின் விதிகளுக்கு சவால் விடும் பாங்கு ஆகியவற்றை கையாள எங்கள் படைப்பாளிகள் என்றும் அச்சப்பட்டதில்லை. அதிக தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் என்று பேச ஆரம்பிக்கும் போதே பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று, விசாரணை மற்றும் ஜெய் பீம் போன்ற சில பெயர்கள் என் நினைவில் தோன்றுகின்றன. இந்தப் படங்கள் நமது சட்ட திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படங்கள் வந்த பிறகு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 


ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான திரைப்படங்களை கையகப்படுத்த, சர்வதேச நிறுவனங்கள் இங்கு அடியெடுத்து வைத்துள்ளன. அவர்களின் வருகை, பொன்னியின் செல்வன் போன்ற கனவுத் திட்டங்களைச் செயல்படுத்தி, உலகளாவிய பார்வையாளர்களிடம் நமது திரைப்படங்கள் சென்றடைய வகை செய்துள்ளது. இது தமிழ் சினிமாவின் வியாபார சந்தை விரிவடையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் எப்படி இருந்தாலும் நமது படைப்புகளின் தரம், அதில் இருக்கும் உண்மையான அசல் சிந்தனைகளே இந்த வாய்ப்பு கைகூடத் தேவையானவை.  மேலும் இந்த உலகுக்கு எடுத்துச் சொல்ல நமது பாரம்பரியத்தில் இன்னும் எண்ணற்ற கதைகள் உள்ளன.


பெருமைமிகு சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு, முன்னெப்போதையும் விட அதிகமான விருதுகளையும் பாராட்டுகளையும் வென்றுள்ளன. ஆஸ்கார் உள்ளிட்ட மற்ற சர்வதேச விருது விழாக்களில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளின் திரைப்படங்கள் பெற்றுள்ள விருதுகள், எங்கள் திறமைக்கான, உலக அரங்கில் நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதற்கான சான்றுகளாகும். எலிஃபண்ட் விஸ்பரர்ஸ், நாட்டு நாட்டு ஆகியவை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தை நான் என் குழந்தைகளுடன் பார்த்தேன். ஊட்டியிலிருந்து ஒரு கதை உலகம் முழுவதும் சென்றுள்ளது என்பதை நினைத்து ஆனந்தப்பட்டேன். கார்த்திகிக்கு நன்றி. பிரேம் ரக்‌ஷித் சார், எங்கள் கால்களை உடைத்தது பத்தாது என்று வெளிநாட்டவரின் காலையும் உடைக்கும் அளவுக்கு அனைவரையும் அந்த நாட்டு நாட்டு நடனத்தை ஆட வைத்துவிட்டார். அதற்கும் நன்றி. 


சவால்கள் இருந்தாலும், தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. அனைத்து சிறந்த கலைகளின் சாராம்சமும் நன்றியுணர்வே என்று சொல்வதைப் போல இந்த வல்லமைமிக்க துறையில் உள்ள அனைத்து சிறந்த சிந்தனையாளர்களுக்கும்எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ் சினிமா எப்போதுமே மாற்றத்தின் முன்னோடியாக இருந்துள்ளது. அப்படி நம் துறை, தொடர்ந்து நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சிஐஐக்கு நன்றி. இது மிகச்சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கப் போகிறது. எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

No comments:

Post a Comment