Sunday, 10 August 2025

தேசியவிருது பெறுவதற்கு முதன்முதலில் ஆதரவளித்து மக்களிடம் பார்க்கிங் படத்தை

 தேசியவிருது பெறுவதற்கு முதன்முதலில் ஆதரவளித்து மக்களிடம் பார்க்கிங் படத்தை கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி - TMJA விழாவில் இயக்குனர் ராம்குமார் நெகிழ்ச்சி 










தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்  விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சிம்ரன் மற்றும் மூன்று தேசிய விருதுகள் பெற்ற " பார்க்கிங் " பட இயக்குனர் ராம்குமார் இருவரும் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரெயின் கோட் வழங்கி விழாவை சிறப்பித்தனர். 


நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் கோடங்கி  ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார்.. அடுத்து சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சங்க தலைவி கவிதா அவர்கள் விவரங்களை தெரிவித்து மேலும் இதுவரையிலும் சங்கத்திற்கு உதவிய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 



இயக்குனர் ராம்குமார் பேசுகையில், 


இந்த மேடை எனக்கு மிகவும் சிறப்பான மேடை. மனதுக்கு நெருக்கமான மேடை. முதன்முதலில் " பார்க்கிங் " திரைப்படத்தை இங்கே திரையிட்டு பத்திரிகையாளர்கள் முன்பு பாராட்டு பெற்றேன். அதே மேடையில் தற்போது தேசிய விருது பெற்று அந்த மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்கள் முன்பு அங்கீகாரம் பெரும்பொழுது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. அன்று நீங்கள் கொடுத்த அங்கீகாரம் தான் இன்று என்னை தேசிய விருதுவரை உயர்த்தி இருக்கிறது. என் முதல் பார்வையாளர்கள் நீங்கள் தான். உங்கள் முன்பு இந்த இடத்தில் வந்து நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என இயக்குனர் ராம்குமார் பேசினார்.


முதல் படத்திலேயே 3 தேசிய விருதுகளை பெற்றபின் இயக்குனர் ராம்குமார் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. 


நடிகை சிம்ரன் பேசுகையில் 

30 வருடங்களாக இந்த சினிமாவில் நிலைத்து நிற்க நீங்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். இன்று " டூரிஸ்ட் ஃபேமிலி " திரைப்படத்தின் நூறாவது நாள், இந்த விழாவை இங்கே உங்களுடன் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு எல்லா விதத்திலும் நீங்கள் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள் அதேபோல் என்னால் முடிந்த ஆதரவுகளையும் நான் எப்போதும் கொடுக்க தவற மாட்டேன். 


தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் முகம் மலர தனது பதில்களை கொடுத்தார் சிம்ரன். " டூரிஸ்ட் ஃபேமிலி " திரைப்படம் நூறாவது நாளை  எட்டிய நிலையில் அதற்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும், மழைக்காலம் துவங்க இருப்பதால் உறுப்பினர்களுக்கு ரெயின் கோட் கொடுக்கப்பட்டு , சங்க உறுப்பினர்கள்  சிறப்பு விருந்தினர்களுடன்  குழுவாக நினைவு புகைப் படம் எடுத்துக் கொண்டு சங்க விழா இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment