Sunday, 8 February 2026

சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ' மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா

 *சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில்  ' மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா*










ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்


குரு சோமசுந்தரம் பேசியதாவது..,


இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில்  ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை — அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு பெருமை. இந்த படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம். குறிப்பாக சைத்ரா — தமிழ் சினிமாவுக்கு தேவையான நடிகை,  அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பு. இந்த படம் ஒரு வாழ்க்கையை முழுமையாக பார்த்து, அதன் சுக–துக்கங்களை நேர்மையாக பேசும் படம். அதுதான் நல்ல, மக்களுக்கான சினிமாவை உருவாக்குகிறது.


இப்படிப்பட்ட படங்களை தயங்காமல் தயாரிக்கும் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றி. கமர்ஷியல் கணக்கை மட்டும் பார்க்காமல்,மக்களுக்கான சினிமாவை ஆதரிப்பது பாராட்டுக்குரியது. இசை பற்றியும் சொல்ல வேண்டும். ஷான் ரோல்ட் இசையில் வந்த என் படங்கள் எப்போதும் தனித்துவமாக இருந்துள்ளன. இந்த படத்திலும் இசை ஒரு முக்கிய பலமாக இருக்கும். இந்த படம் பிப்ரவரி 13 அன்று வெளியாகிறது. ஊடக நண்பர்கள் இதைப் பற்றி எழுதி மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி


இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது..,


ஒரு படத்தை பார்த்த பிறகுதான் அதைப் பற்றி நிச்சயமாக பேச முடியும். சம்பிரதாயமான வாழ்த்துக்காக இல்லாமல், அந்த படம் நமக்குள்ளே என்ன உணர்வை உருவாக்குகிறது என்பதை தைரியமாக சொல்ல முடியும். அந்த வகையில் நான் உறுதியாக சொல்ல முடியும்,  இது ஒரு மிகச்சிறந்த படம்,நிச்சயமாக ஒரு வெற்றிப்படம். ராஜு முருகன்  அவர்களின் படங்களை வரிசைப்படுத்தினால், இதுதான் முதல் இடத்தில் நிற்கும் என்று தைரியமாக சொல்லலாம். அந்த அளவுக்கு அழகாகவும், ஆழமாகவும் இந்த படம் உருவாகியுள்ளது. இதற்குள்ளேயே பல படங்களுக்கான விதைகள் ஒளிந்திருக்கின்றன. இந்த படத்தின் மைய கருத்து ரொம்ப அழகானது — “மனிதன் தோற்கலாம்; ஆனால் மனிதநேயம் எப்போதும் தோற்காது.” இந்த எண்ணமே படத்தை உயர்த்துகிறது.


இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், குறிப்பாக சசிகுமார் சாருக்கும் என் நன்றிகள். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஒரு மனிதநேய உணர்வை நமக்குள் ஏற்படுத்துகின்றன. படம் முடிந்த பிறகும் மனசுக்குள் ஒரு நல்ல தாக்கம் இருக்கிறது.


இசை இந்த படத்தின் இன்னொரு பெரிய பலம்.அது நம்ம மனசுக்குள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு, தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கின்றன. மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு உணர்வுப்பூர்வமான, மனிதநேயமான, மக்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம். இந்த நல்ல படத்தை பார்க்கவும், இதுபற்றி பேசவும் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் என் நன்றி.



இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,


சினிமாவிலிருந்து சில பேர் கண்டிப்பாக ஜெயிக்கணும் என்று நம்ம மனசார ஆசைப்படுவோம். அந்த வகையில் எனக்கு மிகவும் முக்கியமானவர் ராஜு முருகன். சும்மா ஒரு கதையை சொல்லி சம்பளம் வாங்கி போகாமல், ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் இருக்கும் மாதிரி, ஒரு கருத்தோடு படம் பண்ணிக்கிட்டே இருக்கிறவர். இப்போ இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவு. இங்கே இவ்வளோ பேர் கூடிவந்திருக்கிறதுக்கே காரணம் அவருடைய எழுத்து தான். இந்த படம் பார்த்த பிறகு உறுதியாக சொல்ல முடியும், ராஜுமுருகனுக்கு இது இன்னொரு பெரிய அடையாளம். படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது.


இப்படிப்பட்ட கதைகளை படம் ஆக்குறது சவாலான விஷயம். அதற்கு ஒரு துணிச்சலான தயாரிப்பாளர், அதை நம்பி நடிக்கிற நடிகர் தேவை. அந்த துணிச்சலை காட்டி இந்த படத்திற்கு ஓகே சொன்ன சசிகுமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் இந்த மாதிரி மனிதநேயமான, கருத்துள்ள படங்களை தொடர்ந்து ஆதரிப்பது ரொம்ப முக்கியம். அதனால்தான் இந்த படம் இவ்வளவு நேர்மையாக வந்திருக்கிறது. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால், இது கமர்ஷியலாகவும், கருத்து ரீதியாகவும் மக்களிடம் பேசக்கூடிய ஒரு நல்ல படம். ஜோக்கர், குக்கூ மாதிரி இந்த வருடத்தில் நினைவில் நிற்கும் படமாக இது இருக்கும்.



இயக்குநர் த செ ஞானவேல் பேசியதாவது…,


எந்த நெருக்கடியிலும், யாருடைய மனசையும் காயப்படுத்தாமல், ஒரு பொறுப்புணர்வோடு பேசுவதும், எழுதுவதும் ரொம்ப முக்கியம். அந்த வகையில் நான் மனசார பாராட்ட விரும்புவது ராஜுமுருகன். ஒவ்வொரு எழுத்தையும் ஒரு பொறுப்பாக நினைத்து, கருத்தோடு, மனிதநேயத்தோடு படம் எடுக்கிறவர். அவருடைய சிந்தனைக்கு துணை நின்றதே தான் இந்த படம் இவ்வளவு அழகாக உருவாக காரணம்.


இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் சசிகுமார் சாரிடம் நான் சொன்ன முதல் வார்த்தை “நன்றி சார்” தான். இன்றைய காலத்தில், வர்த்தகத்தையும் மனிதநேயத்தையும் சேர்த்து படம் எடுப்பது ரொம்ப பெரிய சவால். அந்த சவாலை தொடர்ந்து ஏற்று, வெற்றி பெறுவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களும், அதைக் கையாண்ட நடிகர்களும் யாருமே நடிப்பதாக தெரியவில்லை — அந்த ஊரில் வாழ்கிற மனிதர்களாகவே இருந்தார்கள். குறிப்பாக சைத்ரா  தமிழ் சினிமா தவற விடக்கூடாத ஒரு நடிகை.


இந்த மாதிரி படங்கள் நம்ம மனசை “டீடாக்ஸ்” பண்ணும். நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களை புதுசா சிந்திக்க வைக்கும். இப்படிப்பட்ட படைப்புகளுக்கு நம்ம எல்லாரும் கை கொடுத்தால், இந்த பயணம் இன்னும் வலிமையாகும். இந்த நல்ல படைப்புக்கு உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.



பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது..,


நான் ராஜுமுருகன் பற்றி பேச ஆரம்பித்தால்  அது பெருசா காமெடியாக முடிஞ்சிடும். அதனால இன்று இந்த விழாவுக்கு வந்து அவரை மனசார வாழ்த்திய, அனைவருக்கும் நன்றி சொல்ல வந்திருக்கேன். ஒரே ஊர்ல வளர்ந்தோம், ஒண்ணா ஊர் முழுக்க சுத்தின பசங்க நாங்க. அந்த ராஜுமுருகன், இன்னைக்கு இப்படியொரு படத்தை இயக்குனராக கொடுத்திருக்கார்னு

நினைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கிறது.


இந்த படம் எல்லா வகையிலும் ராஜுமுருகனுக்கு ஒரு பெரிய வெற்றியை தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு நன்றி. சுப்ரமணியபுரம் முதல் இன்று வரை எவ்வளவு உயரம் போனாலும் அதே பண்போட இருக்கிற சசிகுமார் — அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இந்த படத்தின் இசை பற்றி சொல்லவே வேண்டாம். ஷான் இசையில் இந்த படம் ரொம்பவே தனிச்சிறப்பாக இருக்கும்.


நான் இந்த படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனா கதையை தெரிஞ்சவன் என்ற வகையில் இதுவொரு மிகச் சிறந்த, நிச்சயமான வெற்றிப் படம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கும் அது வரும் நாட்களில் உறுதியா தெரியும்.




இயக்குநர் ப்ரேம்குமார் பேசியதாவது..,


ராஜுமுருகனை நான் இன்று  தான் நேரில் பார்க்கிறேன். நேற்று தான் போன்ல பேசினேன். ஆனா அவரை எனக்கு நல்லா தெரியும் – அவர் படங்கள் மட்டுமல்ல, அவர் வேலை செய்யும் விதமும்,ஒரு ஊர் அவரை எப்படி கொண்டாடுகிறது என்பதுமே அவருடைய சினிமாவை சொல்லிடும். நான் என் படத்தை அவர் ஊரில் எடுக்கும் போது அங்கு அவருக்கு பேனர் வைத்திருந்தார்கள்.  ஒரு ஊரில் ஒரு இயக்குநரை இவ்வளவு மக்கள் கொண்டாடுறாங்கன்னா, அது கண்டிப்பா அவர் சொல்ற கருத்துக்காகத்தான்.


சசிகுமார் சார் உடன் ராஜுமுருகன் படம் பண்ணுறாங்கன்னு கேட்டாலே, கதை என்ன, ஜானர் என்ன, பட்ஜெட் என்ன இதெல்லாம் தெரியாமலேயே “இந்த படம் நல்லா இருக்கும்”ன்னு நம்ம மனசு நம்ப ஆரம்பிச்சிடும். அந்த நம்பிக்கையே பெரிய விஷயம்.


நான் இந்த படத்தை இன்னும் பார்க்கல. ஆனா இந்த கூட்டணி இருக்கிறதாலேயே இந்த படம் கண்டிப்பாக நல்லா இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த படக்குழுவிலுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 


இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது..,


நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்த படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்த படம் ஒரு விஷயத்தை தெளிவாக கேட்கிறது – எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்த படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது.


சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன், ஆனா “ஒரு மனிதனை விட்டுவிடலாமா?”ன்னு கேள்வி எழுப்பும் இடத்துல எனக்கு உண்மையிலேயே ஒரு ஷாக் இருந்தது. இது சரி–தவறு என்று தீர்ப்பளிக்குற படம் இல்லை. நம்ம மனசுக்குள்ள இருக்குற நியாயம், மனிதத்தன்மை, அறம்

இதையெல்லாம் நம்மையே யோசிக்க வைக்குற படம்.


ராஜுமுருகன் தொடர்ந்து இப்படிப்பட்ட சினிமாவை உறுதியோட செய்து வருவார். தான் எழுத்தாளனாக இருந்த போது சந்தித்த அத்தனை மனிதர்களையும் திரையில் கொண்டு வரத் துடிப்பவர்  அதுக்காக தமிழ் சினிமா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.


ஷான் ரோல்டன்  இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு, அம்பேத்கர் சார் மாதிரி தயாரிப்பாளர்கள் – இந்த எல்லாமே இந்த படத்தை ஒரு முக்கியமான படமாக மாற்றியிருக்கிறது. மை லார்ட்  என்னை யோசிக்க வைத்த, உள்ளுக்குள் உலுக்கிய படம். படக்குழுவிற்கு பெரிய வாழ்த்துக்கள்



இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது..,


முருகன் தோற்றாலும் ஜெயித்தாலும்  இவ்வளவு இயக்குநர்கள் உடன் இருக்கிறோம் ஆனால் அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு தயாரிப்பாளர் மறுபடியும் திரும்பி வந்து “முருகன் படம் பண்ணுறேன்”ன்னு நம்பிக்கையோட சொல்றது. எங்களோட அனுபவத்துல, ஒரு தயாரிப்பாளர்கிட்ட “இந்த படத்தை எப்படி புரமோட் பண்ணப் போறீங்க?”ன்னு கேட்டா, “முருகனோட படம் தான்”ன்னு ஒரே வரியிலே சொல்ல முடிஞ்சா, அதுவே மிகப் பெரிய புரமோஷன். உண்மையிலேயே நன்றி சார். முருகன் எந்த சமரசமும் செய்யாதவர்,  எந்த விஷயத்தையும் அவர் மிகவும் ஆழமா யோசிச்சுதான் செய்றார். “எனக்கு ரெண்டு சாய்ஸ் இருக்குன்னாலும், நான் எல்லாத்தையும் எடுக்க மாட்டேன். எனக்கு பிடிச்ச, சரியான படம் மட்டும் தான் எடுப்பேன்”

அப்படின்னு சொல்லி அதை நடைமுறையிலே கடைப்பிடிக்கிறதுதான் அவரோட பெரிய பலம்.


சசிகுமார் சார்— தோற்றாலும், ஜெயித்தாலும் மக்கள் அவருடைய படங்களை தேடி பார்க்கிறாங்க. அந்த நம்பிக்கையே ஒரு நடிகருக்குக் கிடைக்கிற மிகப் பெரிய வெற்றி. அவர் செய்யும் கதாபாத்திரங்கள் எப்போதும் மிக தெளிவாக, எந்த குழப்பமும் இல்லாமல், நேர்மையாக இருக்கும். அந்த சிரிப்பு, அந்த உடல் மொழி, அந்த உள்ளார்ந்த மனிதத்தன்மை—

அதை வீணாக்காமல் பயன்படுத்துறவர். உண்மையிலேயே மிகப் பெரிய வாழ்த்துகள் சார்.


இந்த படம் நிச்சயமாக பேசப்படும் படம். நாளைக்கு நான் ஆவலோட காத்திருக்கிறேன். மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்  இது. எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.




திங்க் மியூசிக் சந்தோஷ் பேசியதாவது


“இந்த படத்தைப் பற்றி பேசுவது  ரொம்ப சந்தோஷமா இருக்குது. ராஜுமுருகனோட முதல் படம் ‘குக்கூ’ல இருந்து இந்த பயணம் தொடர்ந்து வர்றது எனக்கு ரொம்ப நெருக்கமான விஷயம்.” “இந்த படத்தை நான் மூணு–நாலு தடவைக்கு மேல பார்த்திருக்கேன். எத்தனை தடவ பார்த்தாலும், முதல் தடவ பார்த்தப்போ இருந்த அதே எமோஷன் திரும்ப திரும்ப கிடைக்குது.” அம்பேத்கர் சார் ஒரு சினிமா ரசனை கொண்ட தயாரிப்பாளர். நல்ல கதைகளை ரொம்ப தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்களை ஆதரிக்கிறவர்.


ஷான் ரோல்டன்  மியூசிக் எப்போதுமே ஸ்பெஷல். இந்த படத்துல அது இன்னும் நெருக்கமா, இதயத்தோட இணைஞ்ச மாதிரி இருக்கு. இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை அடையும். மிகப் பெரிய பிளாக்பஸ்டர் மாறும். எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.


இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது..,


மை லார்ட்  – ராஜுமுருகனின் சமூகமும் மனிதமும் பேசும் இன்னொரு முக்கிய படைப்பு “‘வட்டியும் முதலும்’ படித்தபோதே யார் இந்த எழுத்தாளர் என்று ஆச்சரியப்பட்டேன். நகைச்சுவை, இலக்கியம், சமூக பார்வை மூன்றையும் இயல்பாக கலக்கும் எழுத்தாளர் அவர். அதே தன்மைதான் அவருடைய திரைப்படங்களிலும் தொடர்கிறது”


“இந்த படத்தை முழுக்க ஒரு ரசிகர் மனநிலையோட தான் பார்த்தேன். என்டர்டெயின்மெண்ட் இருக்கா, கருத்து சொல்லுதா, எங்காவது சலிப்பா இருக்கா என்ற நேர்மையான பார்வையோட பார்த்தேன். உண்மையிலேயே இந்த படம் ரொம்ப மனசை தொட்டது. ராஜுமுருகன் மீண்டும் அவருடைய ஃபார்முக்கு வந்திருக்கார்.


‘ஜோக்கர்’, ‘குக்கூ’ போன்ற படங்களுக்குப் பிறகு, மை லார்ட் ராஜுமுருகனின் படைப்புப் பயணத்தில் இன்னொரு சிறப்பான  படம்

“அவர் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையை கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்த படத்திலும் தெளிவாக தெரிகிறது. இது 

கருத் ரீதியாகவும், கமர்ஷியலாகவும் வெற்றி பெறும் படம்”


“சசிகுமார் ஒவ்வொரு படத்திலும் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் நடிகர். இந்த படத்தில் அந்த ஈடுபாடு இன்னும் அதிகமாக தெரிகிறது” என கூறினார். “மியூசிக் படம் தாண்டி தெரியக்கூடாது; ஆனா மனசுக்குள்ள ஆழமா உட்காரணும். இந்த படத்தில் அந்த சமநிலையை ஷான் சரியாக செய்திருக்கிறார்.  “மொத்தத்தில், ‘மை லார்ட்’ ராஜுமுருகன் ‘நான் யார்’ என்பதை மீண்டும் நிரூபிக்க வந்திருக்கும் முக்கியமான படம்” அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.




இயக்குநர் பாலா பேசியதாவது..,


தயாரிப்பாளர் அம்பேத்கர் குமார் மிக நல்ல  கதைகளை மிகத் தேர்ந்தெடுத்து, இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள் நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.


“‘குக்கூ’, ‘ஜோக்கர்’, இப்போது ‘மை லார்ட்’ – டைட்டிலிலேயே நக்கலையும் கருத்தையும் சேர்த்து வைக்கும் தைரியம் ராஜுமுருகனுக்கே உரியது. அவர் சந்தித்த மனிதர்களையும், வாழ்க்கையையும் கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்த படத்திலும் தெளிவாக தெரிகிறது” படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும், “நிகழ்வில் பேசியவர்களின் கருத்துகளையும், படம் குறித்து வந்துள்ள எதிர்வினைகளையும் பார்த்தால், இது மரியாதைக்குரிய, தரமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”


“சசிகுமார் எந்த படமாக இருந்தாலும் முழுமையாக தன்னை ஒப்படைக்கும் நடிகர். இந்த படத்தில் அவருடைய ஈடுபாடும், நடிப்பும் இன்னும் அதிகமாக தெரிகிறது. குறிப்பாக நடனக் காட்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. நடிகை சைத்ரா  “உண்மையாக நல்ல நடிகை. சில காட்சிகளில் அவருடைய ஆக்ரோஷமான, ஆழமான நடிப்பு பார்ப்பவர்களை கட்டிப்போடும். தமிழ் சினிமா இப்படிப்பட்ட நடிகைகளை பாதுகாத்து, அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்”.


“‘மை லார்ட்’ நல்ல படம் மட்டுமல்ல, நம்பிக்கையை தரும் படம். படம் கண்டிப்பாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் வாழ்த்துக்கள்.



தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,


ஒலிம்பியா மூவிஸ் சார்பில் வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.


ராஜுமுருகன் எழுத்தாளராக இருந்த போதே தெரியும். அவர் என்னை சந்தித்து  ஜிப்சி கதை சொன்னார். அந்தப் படம் எனக்கு வெற்றிப்படம் தான். அவர் இந்த கதையை சொன்ன போது சின்ன படமாக எடுக்கலாம் என்றார். அடுத்து நீரவ் ஷா, ஷான் ரோல்டன் என்றேல்லாம் சொன்னார். இறுதியாக சசிக்குமார் நடிக்க வைக்கலாம் என்றார். அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இம்மாதிரியான படத்தை மக்களிடம் சேர்க்க அவர் மாதிரி ஒரு நடிகர் கண்டிப்பாக வேண்டும். நடிகை சைத்ரா அவர்களும் அற்புதமாக நடித்துள்ளார். ஷான் மிக அற்புதமான இசையை தந்துள்ளார்.


நான் இனி எத்தனை படங்கள் தயாரித்தாலும் மை லார்ட் மாதிரி ஒரு படம் செய்வேனா எனத் தெரியாது அந்தளவு இது மிகச்சிறந்த படம் அனைவருக்கும் நன்றி.



நடிகை சைத்ரா பேசியதாவது..,

 

“இங்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ராஜு சார் மற்றும் எங்கள் சினிமாவுக்காக நீங்கள் இங்கு வந்து பேசியது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என் நடிப்பைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது”


“தமிழ் மொழி எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமானது. இந்தப் படத்தின் மூலம் அந்த விருப்பம் இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழ் மொழியை மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அனுபவம் எனக்குள் உருவாக்கியுள்ளது”


இயக்குநர் ராஜு சார் குறித்து சொல்ல வேண்டும் அவருடைய படங்களை நான் முன்பே அறிந்திருந்தாலும், அவருடைய மனிதநேயமும் நம்பிக்கையும் இந்தப் படத்தின் போது எனக்கு நெருக்கமாக தெரிந்தது. ஆரம்பத்தில் எனக்கு சிறிது பயம் இருந்தது. ஆனால் அவர் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இந்தப் பயணத்தை எனக்கு எளிதாக்கியது.  சசிக்குமார் மிகப்பெரிய இயக்குநர் நடிகர் அவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம் அவர் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.


“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக என்னை இணைத்துக்கொண்ட ஒலிம்பியா பிலிம்ஸ்  நிறுவனத்திற்கும், முழு படக்குழுவிற்கும் மனப்பூர்வமான நன்றி. இந்த அனுபவம் என் வாழ்க்கையிலும், கலைப் பயணத்திலும் என்றும் நினைவில் இருக்கும்” நன்றி.



இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,


இந்த படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இதில் சொல்லப்படும் கருத்தும், அதை அணுகிய விதமும் நேர்மையானது. சமூக உணர்வோடு சொல்லப்படும் விஷயங்கள் எளிதானவை அல்ல. ஆனால் அவை மனிதர்களை மையமாக வைத்து பேசும்போது தான் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்.


ராஜுமுருகன் இந்தப்படத்தின் கதை சொன்னபோது இது சமூகம் சார்ந்த படமாக இருக்குமென்று நினைத்தேன் ஆனால் இது ஜனரஞ்சக படமாகவும் இருந்தது.  இசை, காட்சி அமைப்பு, பாடல்கள் – அனைத்தும் கதைக்கு ஆதரவாக, சினிமாட்டிக் அனுபவத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. வெறும் எண்டர்டெயின்மெண்ட் மட்டுமல்ல; சிந்திக்க வைக்கும் உள்ளடக்கத்தையும் இந்த படம் வழங்குகிறது.


நான் அண்ணா எனச் சொல்லி பெருமைப்படும் நபர் சசிக்குமார் அவரிடம் எந்த ஈகோவும் இல்லை. மிகச்சிறந்த மனிதர் இந்தப்படத்தை மிகச்சிறப்பாக ஆக்கியிருக்கிறார்.  சைத்ரா நடிப்பை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கோவில்பட்டி பொண்ணாக மாறியிருக்கிறார்.


இந்த முயற்சி ஒரு தனித்துவமான கலை அனுபவம். இந்த படக்குழுவினரின் உழைப்புக்கும், நேர்மையான அணுகுமுறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.



நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,


“இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் ஒரு பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கரைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான்? அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும்? என்பதையே இந்த படம் கேள்வியாக முன்வைக்கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம்,”


“இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு வழிகாட்டிகள். இங்கே கிடைக்கும் வாழ்த்துகளை நான் என் அண்ணன் பாலாவுக்கு ஒப்படைக்கிறேன். இது எனக்கான வாழ்த்து அல்ல; இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்குமானது.


“இந்த கதையை, ‘கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழு சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர். இப்படிப்பட்ட நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காக தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றார்.


“இந்த படம் ஒரு கூட்டுப் பயணம். நடிகர்கள், இசையமைப்பாளர், பாடகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் தங்களது முழு உழைப்பையும் நேர்மையையும் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.


இயக்குநர் ராஜுமுருகனை சைக்கோ என்றார்கள் நானே பயந்தேன் அவருடன் வேலைபார்த்த போது அவர் அப்படி இல்லை. படம் முடித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவர் சினிமா மீது தான் சைக்கோவாக இருக்கிறார். அவர் நல்ல படங்கள் தருவதில் சைக்கோவாக இருக்கிறார்.  இந்த படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும்.  நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்,” நன்றி.


இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது..,


உண்மையிலேயே இது எனக்கு கொஞ்சம் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. என்னைப் பற்றி இவ்வளவு அர்த்தமுள்ள, ஆழமான வார்த்தைகளை இங்கே பலர் பேசினார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.


“நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த களத்தில் தினமும் பாலா சாரின் பிதாமகன் படத்தின் சிடியை 52 முறை வாங்கியிருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும், நேர்மையையும் சினிமாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அந்தப்படம் தந்தது அவர் வந்து வாழ்த்தியது பெருமை.


மாரி செல்வராஜின் படங்கள் என்னையே வெட்கப்பட வைத்தது. அவர் மூலம் நான் கற்றுக்கொண்டேன் அவர் வாழ்த்தியதும் மகிழ்ச்சி. என் குருநாதர் லிங்குசாமி சார் என்னை கரம்பிடித்து சினிமாவில் அழைத்து சென்ற அவருக்கு என் நன்றிகள்.


குரு சோமந்தரம், ஏ வெங்கடேஷ், ரவிக்குமார், ஞானவேல், யுகபாரதி என இங்கு வந்து வாழ்த்திய ஆளுமைகள் அனைவருக்கும் என் நன்றி.


நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம்.

இந்த படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல. ‘ராஜுமுருகன்’ என்ற மனிதன் மீது ‘அம்பேத்குமார்’ என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட்  உருவானது,” என்று அவர் கூறினார்.



“அம்பேத்குமார் என்ற மனிதர் இல்லையென்றால் இந்த படம் உருவாகியிருக்காது. நான் என் வாழ்க்கையில் மிகவும் டவுன் ஃபாலில் இருந்த ஒரு காலகட்டத்தில், என்னை அழைத்து ‘வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் சார், ஒரு நாள்கூட உட்காரக் கூடாது’ என்று சொல்லி, அடுத்த நாளே படம் பண்ணத் தொடங்குவதற்கான மனநிலையை எனக்கு கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி,”


“இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயல்பாகவே வேண்டிக் கொள்வது, அந்த நம்பிக்கையை என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம்,” என்றார்.


“இந்த படத்தை முதல் நாளிலிருந்து தன் தோளில் சுமந்து, எப்படியாவது இந்த சந்தையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து என் கூடவே இருந்தவர் Think Music சந்தோஷ். படம் பார்த்த நாளிலிருந்து இன்று வரை இந்த படத்தைப் பற்றி பேசிக்கொண்டே, ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்தார். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், சந்தோஷ் அந்த இடத்தில் இருந்தால் அது நிச்சயம் கிளியராகிவிடும். அவர் எப்போதும் எனக்கு ‘ஆல்-டைம் டார்லிங்’,”.


“இந்த படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆரம்பத்தில் கால்ஷீட் தொடர்பான சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் கதையை கேட்டவுடன், அனைத்தையும் தாண்டி உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.


ஷான் ரோல்டனுக்கும்  எனக்கும் உள்ள பிணைப்பு வெறும் இசை மட்டுமல்ல. அது இலக்கியம், அரசியல், சமூகம் என்று பல அடுக்குகளைக் கொண்ட ஆத்மார்த்தமான உறவு. அந்த எல்லாமே சேர்ந்து தான் அவரது இசையாக வெளிப்படுகிறது. இந்த படத்தில் அவர் இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறார்.


சசிக்குமார் அண்ணன்  இல்லையென்றால் இந்தப்படம் இல்லை, அவர் முழுப்படத்திற்கும் உறுதுணையாக இருந்தார். அன்பையும் நம்பிக்கையையும் பேச பணம் தேவைப்படுகிறது எப்படியாவது இப்படத்தில் பணத்தை சம்பாதித்து என் தயாரிப்பாளருக்கு தந்து விட வேண்டும். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன் நன்றி.


ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,  அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.


இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.


இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment