Featured post

Nee Forever Movie Review

Nee Forever Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம nee forever படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Sudharsan Govind , Ar...

Sunday, 20 January 2019

சூர்யா - கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்

சூர்யா - கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்
கஜா புயல் பாதிப்பில் வீடு இழந்த விவசாயிகளுக்கு

கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர்.

தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி விவசாயிகள் துயர் துடைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து  அவர்களின் ரசிகர்
மன்றத்தினர் நேரடியாக களத்தில் இறங்கினர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் தங்கி தேவையான உதவிகளைச் செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே 'தண்டா குளத்துக்கரை' என்ற குக்கிராமத்தில் வசித்த 50 குடும்பங்கள் கஜா புயலில் தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்து விட்டனர். தலைமுறையாக அதே இடத்தில் வசித்தாலும் மின் இணைப்பு கூட இல்லாத வறுமையான சூழலில் வாழ்ந்த அந்த மக்களுக்கு மீண்டும் வீடு கட்டித் தரும் முயற்சியில் சூர்யா - கார்த்தி நற்பணி இயக்கத்தினர் இறங்கினர்.

நற்பணி இயக்கத் தலைவர் பரமு அவர்கள் நேரடியாக சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகள்
தொடங்கப்பட்டன. பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பதினைந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இரண்டு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சூர்யா - கார்த்தி நற்பணி இயக்கத்தினர் தண்டா குளத்துக்கரை கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். இந்த திட்டத்திற்கு செலவாகும் முழு தொகையையும் சூர்யா - கார்த்தி ரசிகர்களே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இது பற்றி தண்டா குளத்துக்கரை கிராமத்தில் வசிக்கும் பாலு கூறும்போது,

"ரசிகர்கள் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்ற எங்களின் மனநிலையை சூர்யா - கார்த்தி ரசிகர்கள் முற்றிலும் மாற்றிவிட்டனர். புயல் பாதிப்பில் நாங்கள் துவண்டு போய் இருந்தபோது அரிசி, பருப்பு, காய்கறி, சோலார் விளக்கு என அனைத்தையும் வழங்கினர். தற்போது யாரிடம் இருந்தும் ஒரு பைசா வாங்காமல், தங்கள் சொந்தச் செலவில் எங்கள் வீடுகளைக் கட்டித்தருகின்றனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைபட்டுள்ளோம்" என்றார்.


தஞ்சாவூரில் கலந்து கொண்ட நிர்வாகிகளின் பெயர்கள்  
பரமு , வீரமணி , சுந்தர் , ஆரி  , குணா , ஹரிராஜ் , சுரேஷ் , வாஸீம்ராஜா , மாரிமுத்து , ஜெகதீஷ் , பெருமாள் , சரவணன் , ரமேஷ் கார்த்திக் , ஆனந்த் ,  சதிஷ் ,





No comments:

Post a Comment