Featured post

அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

 *‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா* தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்...

Tuesday, 11 August 2026

அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

 *‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா*



தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களின் தனித்துவமான இசைப் பாணியில், உள்ளூர் கலாச்சாரம், நகைச்சுவை மற்றும் தமிழ் மொழியின் தனித்துவத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும், இந்தப் பாடல் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சமகால ஹிப்-ஹாப்புடன் கொண்டாடுகின்றனர். கூர்மையான வரிகள், மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் துடிப்பான இசை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழ் அடையாளம், சினிமாவின் பழைய நினைவுகள் மற்றும் தொடர்ந்து பரிணமித்து வரும் பிராந்திய ராப் இசை ஆகியவற்றை உற்சாகமாகக் கொண்டாடுகிறது.


புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உருவாகியுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் பிரபலமான காட்சியமைப்பை இன்றைய தலைமுறைக்கேற்ற வகையில் மாற்றி வடிவமைத்துள்ளது. பாடலின் இசை வீடியோவில் பாரம்பரிய கச்சேரி அரங்கம், துடிப்பான ராப் அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. பாரம்பரிய காட்சியமைப்புகள் நவீன ஹிப்ஹாப் பாணியுடன் இணைகின்றன. குறும்புத்தனமான கதை சொல்லல், நகைச்சுவை கலந்த பஞ்ச் வரிகள் மற்றும் கில்லா கே, பால் டப்பா இருவருக்குமிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. தமிழ் கலாச்சாரத்தை புதிய மற்றும் துடிப்பான இசை மூலம் கொண்டாடும் இந்தப் பாடல், தமிழ் பாரம்பரியத்தை இன்றைய கலாச்சார உரையாடலுக்குள் புதிய கோணத்தில் கொண்டு வருகிறது. பாரம்பரியத்தையும் நவீன ராப் இசையையும் இணைக்கும் இந்த இசை மற்றும் காட்சியமைப்பு, தமிழ் மரபுக்கு மரியாதை செலுத்துவதோடு, அதை இன்றைய தலைமுறைக்குள் தன்னம்பிக்கையுடன் எடுத்துச் செல்கிறது.


தமிழ் ஹிப்ஹாப் உலகில் தங்களுக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ள இந்த இரு கலைஞர்களின் இயல்பான கூட்டணியாகவே இந்தப் பாடல் அமைந்துள்ளது. அன்றாட தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்வியல் அனுபவங்களை தனது இசையில் பிரதிபலித்து வரும் பால் டப்பா, தமிழ் ஹிப்ஹாப் உலகின் முக்கியமான குரல்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அதேபோல், கூர்மையான கதை சொல்லல், நகைச்சுவை மற்றும் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதையாடல்கள் மூலம் கில்லா கே தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இருவரின் நீண்டகால நட்பும், ஒரே மாதிரியான படைப்புச் சிந்தனைகளும் ‘அடடா’ பாடலை மற்றுமொரு கூட்டணிப் பாடலாக மட்டும் இல்லாமல், அவர்கள் இருவரும் தொடர்ந்து தங்களின் இசை மூலம் முன்னிறுத்தி வரும் தமிழ் கலாச்சாரத்திற்கான கொண்டாட்டமாக மாற்றியுள்ளது. 


‘அடடா’ பாடல் மூலம் பாரம்பரியமும் புதுமையும் எவ்வாறு இயல்பாக ஒன்றிணைய முடியும் என்பதை இருவரும் மீண்டும் நிரூபித்துள்ளனர். உள்ளூர் கலாச்சாரத்தை பெருமையுடன் கொண்டாடுவதோடு, உலகளாவிய ரசிகர்களையும் கவரும் வகையில் தமிழ் ஹிப்ஹாப் இசை தொடர்ந்து வளர்ந்து வருவதை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது. தமிழ் சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற கிளாசிக் படங்களில் ஒன்றிலிருந்து உத்வேகம் பெற்று, சமகால இசைத் தயாரிப்பு, கூர்மையான வரிகள் மற்றும் நகைச்சுவை கலந்த கதை சொல்லலுடன் உருவாகியுள்ள ‘அடடா’, மாறிவரும் காலத்திற்கேற்ப பரிணமித்தாலும், அதன் உண்மை தன்மையை இழக்காமலும் இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


பாடல் குறித்து கில்லா கே பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் கலாச்சாரத்தை துடிப்பானதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் மாற்றும் அனைத்தையும் கொண்டாடும் விதமாக ‘அடடா’ பாடலை உருவாக்கியுள்ளோம். ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை ஹிப்ஹாப் வழியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதே நேரத்தில் அதன் ஆன்மாவையும் உணர்வையும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்க விரும்பினோம். ஒவ்வொரு வரியும், காட்சியும், நடிப்பும் மக்கள் ரசிக்க வேண்டும், தங்களது வேர்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும், மேலும் நமது கலாச்சாரத்தை புதிய விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டது” என்றார்.


பால் டப்பா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் பாடலுக்கான யோசனையை முதன்முதலில் கேட்டபோதே, இது சிறப்பான விஷயம் என்பதை உணர்ந்தேன். தமிழ் கலாச்சாரத்தின் நகைச்சுவை, மொழி மற்றும் சினிமா பாரம்பரியத்தை நவீன ராப் இசையுடன் ‘அடடா’ பிரதிபலிக்கிறது. கில்லா கே உடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. உண்மையான, பொழுதுபோக்கு நிறைந்த, தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் பிரதிபலிக்கும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களது இருவரின் பார்வையும் ஒன்றாக இருந்தது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ள வேண்டும் என்பதும் எங்களது நோக்கமாக இருந்தது” என்றார். 


டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியாகியுள்ள ‘அடடா’, இந்தியாவின் சமகால இசைச் சூழலில் தமிழ் ஹிப்ஹாப் தனது தனித்துவமான இடத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில் வெளியாகியுள்ளது. பிராந்தியக் கதையாடல் மற்றும் கலாச்சாரப் பெருமையை தங்களது இசையில் உண்மைத்தன்மையுடனும் தனித்துவத்துடனும் வெளிப்படுத்தி வரும் இந்த இரு கலைஞர்களின் கூட்டணி, நமக்கு மிகவும் நெருக்கமான இடங்களில் இருந்து உருவாகும் கதைகளே பல நேரங்களில் மிகவும் வலிமையானவை என்பதை நினைவூட்டுகிறது. இதன் மூலம், பிராந்திய இசை உள்ளூர் தன்மையுடன் இருந்தாலும், உலகளாவிய ரசிகர்களையும் இணைக்கும் என்பதை ‘அடடா’ மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

No comments:

Post a Comment