Featured post

ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE

 ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE* Rocking Star...

Tuesday, 7 January 2020

சிறுகதை உலகின் புதிய வரவான தேசம்மா நூலுக்கு புகழாரம்

சிறுகதை உலகின் புதிய வரவான தேசம்மா நூலுக்கு புகழாரம்
தமிழ்நாட்டின் பன்முக வாழ்க்கையை விவரிக்கும் அற்புதம் தேசம்மா
எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் நூலை வெளியிட்டு வாழ்த்து

எழுத்தாளர் க.அரவிந்த் குமார் எழுதிய தேசம்மா என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா,  (04/01/20)  சென்னை, தியாகராய நகரில் உள்ள நாம் அறக்கட்டளை அரங்கில்  தேசம்மா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதல் நூலை வெளியிட நக்கீரன் ஆசிரியர் கோபால் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் நூலை வெளியிட எழுத்தாளர் இரா.முருகவேள் பெற்றுக் கொண்டார். இதேபோன்று எழுத்தாளர் ஷாஜி வெளியிட எழுத்தாளர்  என்.ஸ்ரீராம் பெற்றுக் கொண்டார். 

விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், மக்கள் மொழியில் படைப்புகள் மேலெழுந்து வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேசம்மா நூலில் வடசென்னையில் இதுவரை பார்த்தறியாத மக்களின் வாழ்க்கை பதிவாகி உள்ளதாக புகழாரம் சூட்டினார். 
 

 

நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன் கோபால், எழுத்தாளர் அரவிந்த் குமாரின் முதல் நூலை தம்முடைய பதிப்பகம் வெளியிட்டதை நினைவுகூர்ந்தார். இந்த புத்தகம் வெற்றி அடையவும் வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்புரை ஆற்றிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், மீனவ மக்களின் வாழ்க்கையைப் பற்றி சமவெளியில் இருப்பவர்கள் அறிந்தது குறைவு என்றார். அவர்களின் வாழ்வியலை எழுதுவதற்கு போதுமான எழுத்தாளர்கள் இல்லை என்றும் அந்த குறையை போக்கும் வகையில் அரவிந்த் குமார் வந்துள்ளதாகவும் வாழ்த்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய எழுத்தாளர் இரா.முருகவேள், உலகப்புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோ எப்படி சிற்பக்கலையின் மரபுகளை உடைத்து புதிய பாணி ஒன்றை உருவாக்கினாரோ, அதுபோல சிறுகதை உலகின் மரபுகளை உடைத்து புதிய படைப்பாக தேசம்மா வெளிவந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். சமூகத்தின் அவலங்களை தனிநபர்கள் எதிர்கொள்ளும் தருணங்கள் சிறுகதை தொகுப்பில் அரவிந்த் குமார் சிறப்பாக எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புத்தகத்தை பெற்றுக் கொண்டு பேசிய எழுத்தாளர் ஷாஜி, தன்னுடைய வாழ்வில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தை சிறுகதையாக அரவிந்த் குமார் எழுதி உள்ளது ஆச்சர்யமூட்டுவதாக குறிப்பிட்டார். தற்போதைய காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதுவதற்கு தரமான எழுத்தாளர்கள் இல்லை என்பதை பொய்ப்பிக்கும் வகையில் அரவிந்த் குமாரின் வருகை உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

எழுத்தாளர் ஸ்ரீராம் பேசும்போது, தேசம்மா சிறுகதை உண்மையில் பெருநாவல் எழுதுவதற்கான களம் என்றார். அத்தகைய வாழ்க்கை முறை உள்ளது பொது சமூகத்தினருக்கு தெரியாத என்ற நிலையில் அரவிந்த் குமார் அதனை விரித்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

விழாவினை நயம்பட தொகுத்து வழங்கினார் சன்நியூஸ் சிறப்பு செய்தியாளர் ஈவெரா. ஏற்புரையாற்றிய எழுத்தாளர் அரவிந்த் குமார், காலச்சுவடு பதிப்பகத்திற்கும், சக எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் விழா அரங்கிலேயே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment