Featured post

No Celebrity. No Digital Launch. "Enna Vilai" Lets an Entire Village Unveil Its First Look

 *No Celebrity. No Digital Launch. "Enna Vilai" Lets an Entire Village Unveil Its First Look* _*The people who welcomed our story ...

Wednesday, 1 February 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார்

 *ரன் பேபி ரன்* 

*திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!*

*- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி*


நான் 'எல்.கே.ஜி' ஆரம்பிக்கும்போது முதலில் அரசியல், அடுத்து ஆன்மீகம், அடுத்து பொருளாதாரம், கல்வி இப்படி போகலாம் என்று தான் தோன்றியது. எனக்கும் அப்படித்தான் பிடிக்கும். யூகிக்கும் வகையிலான படங்கள் இனிமேல் பண்ணக் கூடாது. பார்வையாளர்களுக்கு முன் நான் விழிப்புணர்வாக இருந்தால் தான் உடனே மாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்திருக்கும்போது தான் 'ரன் பேபி ரன்' பட வாய்ப்பு வந்தது. 

ஆர்.ஜே.பாலாஜியா? இவர் எப்போதும் நகைச்சுவை படம் தான் எடுப்பார் என்று எண்ணும்படி இருக்கக் கூடாது. என்னை நாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஆர்.ஜே.பாலாஜி படம் என்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் வர வேண்டும். இந்த கதை கேட்கும்போது அதுதான் தோன்றியது. ஒரு வருடம் முன்பு, நான் கதை கேட்கும் முன்பே படப்பிடிப்பிற்கு செல்லும் அளவு அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்த கதை கேட்டு பிடித்து சம்மதம் சொன்னதும் படப்பிடிப்பிற்கு சென்று விட்டோம். அதேபோல், இயக்குநர் என்ன கதை கூறினாரோ? அதை அப்படியே தான் எடுத்திருக்கிறார்கள்.







இப்படத்தில் எனக்கு ஜோடி உண்டு. ஆனால், அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லை. பாட்டு பாடி நடனமாடினால் தான் கதாநாயகி என்று அர்த்தம் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனக்கு ஜோடியாக ஈஷா தல்வார் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிவா நடிப்பில் வெளியான தில்லுமுல்லு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சினிமாத்தனமான சண்டைக் காட்சிகள் இருக்காது. சராசரி மனிதனிடம் ஒருவன் பணப்பையை பறித்துக் கொண்டு ஓடினால், அந்த சராசரி மனிதன் என்ன செய்வானோ? அப்படித்தான் சண்டைக் காட்சிகள் இருக்கும்.

#சாமி படத்தில் விக்ரம் சாரை போலீஸாக ஏற்றுக் கொண்டது போல் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்கு முதலில் கண்ணாடி அணியாமல் பழக வேண்டும் என்றுதான் வீட்ல விஷேசங்க படத்தில் நடித்தேன். அப்போது 10 கேள்விகளில் 4 கேள்விகள் கண்ணாடியைப் பற்றி தான் இருக்கும். ஆனால், இந்த படத்தின் டிரைலரில் அதுபோன்ற கேள்விகள் வரவில்லை. மக்கள் பழகிவிட்டார்கள். ஆகையால், உடலை ஏற்றிக் கொண்டு தான் போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றுள்ளேன். அதற்கு சிறிது காலம் ஆகும். அதற்குள் நல்ல கதை வந்தால் எனது நண்பர் அருள்நிதி அல்லது ஜெயம் ரவி பரிந்துரை செய்வேன்.

'வீட்ல விஷேசங்க' படத்தில் நெருக்கமான காட்சி இருக்காது. அந்த காட்சியை திட்டமிடும்போதே நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் எடுத்தோம். ஆனால்,

 'ரன் பேபி ரன்' படத்தில் கண்ணியமான காதல் காட்சிகள் இருக்கும்.

செங்கல்பட்டு, செஞ்சி, மதுராந்தகம், வாலாஜா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடித்தினோம். ஒரே அறையில் நடக்கும் திரில்லராக இல்லாமல், பல இடங்களில் நடிக்கும் விதமாக இருக்கும். பூவிழி வாசலிலே படத்தின் கதையை முன்பே எப்படி கூற முடியாதோ, அப்படித்தான் இந்த படத்தின் கதையையும் கூற முடியாது. ஆனால், கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு வரை யார் குற்றவாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

நான் சினிமாவிற்கு வர வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. என்னுடைய ஆர்.ஜே. பணியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமாவிற்கு வந்தது ஆசீர்வாதத்தினால் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் தான் அறிமுகமானேன். அதற்கு பிறகு என்னுடைய இந்த வளர்ச்சியை ஆசீர்வாதமாக தான் கருதுகிறேன். ஆர்.ஜே.வாக இருக்கும் போது பலரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஆகையால், சினிமாவில் எனக்கு யாரும் போட்டி கிடையாது. 

மக்களாக கொடுக்காமல், எனக்கு நானே ஸ்டார் பட்டம் போட்டுக் கொள்வது பிடிக்காது. 

விமர்சனம் செய்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது. அதை நாம் இப்படித்தான் விமர்சிக்க வேண்டும் என்று கூற முடியாது. இன்றைய காலத்தில் எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. 1000 பேரில் 900 பேருக்கு முகநூல் பக்கம் இருக்கிறது. ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காது.வீட்ல விஷேசங்க படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் பல வந்து கொண்டிருந்தாலும், பிடிக்கவில்லை என்ற விமர்சனங்களும் இருந்தது. அதை நம்மால் தடுக்க முடியாது.

கடந்த வருடம் ஜனவரி 27ஆம் தேதி நடிகர் விஜய் கதை கேட்க அழைத்தார். 40 நிமிடங்கள் ஆனது. நன்றாக சிரித்துவிட்டு, உறுதியாகவும், நன்றாகவும் இருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி விடலாமா? என்று கேட்டார். வீட்ல விஷேசங்க படத்திற்கே 5 மாதங்கள் ஆனது. உங்களை இயக்க தயாராவதற்கு குறைந்தது ஒரு வருட காலமாவது வேண்டும் என்றேன். அவரும் சரி என்றார். இதற்கிடையில் அவருக்கு ஏற்ற வகையில் வேறு ஏதேனும் கதை தோன்றினாலும் கூறுவேன். ஆனால், அவருக்கு கூறிய கதை அவருக்கு மட்டும் தான். வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன்.

இந்த வருடத்தில் எனது நடிப்பில் 3 படங்கள் வெளியாகும். ரன் பேபி ரன் படத்திற்கு பிறகு 'சிங்கப்பூர் சலூன்', இன்னொரு படம் இனிமேல் தான் படபிடிப்பு ஆரம்பமாகும். இரட்டை வேடத்தில் நடிப்பதற்கு சில காலம் ஆகும். அசாதாரணமான நடிகரால் தான் ஒரே படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். 'மைக்கேல் மதன காம ராஜன்' மாதிரி எனக்கும் நடிக்க ஆசை இருக்கிறது.

முதலில் ஒற்றை கதாபாத்திரத்தில் உறுதியான ஹீரோவாக ஆன பிறகு தான் அதைப் பற்றி சிந்திக்க முடியும்.

எனக்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் பழக்கம் என்பதால் அவர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. அனைவரையும் படத்திற்கு தான் அழைப்பேன் என்றார்.


- ஜான்சன்.

No comments:

Post a Comment