Featured post

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai

 Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai* The team of ‘Bethlehem Kudumba Unit’ recent...

Tuesday, 14 July 2026

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட

 *மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’*




தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை வழங்கி வரும் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம், சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பாராட்டுகளைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மி, அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசு விருதைப் பெற்றார். இதன்மூலம் ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம் இரண்டு தமிழக அரசு விருதுகளைப் பெற்ற பெருமையைச் சேர்த்தது.


இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்–இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘குரங்கு பெடல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது.


இந்நிலையில், மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் தனது அடுத்த படைப்பாக ‘ஆண்ட’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ராசி அழகப்பன் ஏற்றுள்ளார்.


ஜென்சி (Gen Z) தலைமுறையின் பார்வையில் தொடங்கி, 1980-களின் வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு “லைஃப் டைம் ஸ்டோரி”யாக ‘ஆண்ட’ உருவாகிறது. இதில் இடம்பெறும் தட்சணாமூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் முழுமையான வாழ்க்கைப் பயணமே கதையின் மையமாக அமைகிறது.


வானத்தை நோக்கி கனவுகளைக் கண்ட ஒரு மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கை, அவர் சந்தித்த சவால்கள், உறவுகள், சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. காலம் மாறினாலும் மனித மதிப்புகள் மாறக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கதை அமைந்துள்ளது.


இந்தத் திரைப்படத்தில் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களிலும் புதுமுகங்களே நடிக்க உள்ளனர். அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களுடனான ஆலோசனைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.


படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


வாழ்க்கையை, மனித உறவுகளை, சமூகப் பொறுப்பை மற்றும் காலத்தின் மாற்றங்களை ஆழமாகப் பதிவு செய்யும் ‘ஆண்ட’, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு திரைப்பட வட்டாரங்களில் நிலவுகிறது

No comments:

Post a Comment