Featured post

When love travelled through letters and lived on cassettes

 *When love travelled through letters and lived on cassettes* _Habeebi to Premiere on 25th September on Sony LIV_ Before messages to loved o...

Sunday, 17 May 2026

அதிரடி" தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது - இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்

 *"அதிரடி" தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது - இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்*











*நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? - அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்*


*டொவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிரடி படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்தில்*



இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அதிரடி." பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, "இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் "அதிரடி" என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அதிரடி என்பது சுத்தமான தமிழ் பெயர் தான். அதிரடி என்ற வார்த்தைக்கு ஒரு தாக்கம் இருக்கிறது, இதேபோல் இந்தப் படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் ஏற்றவாரு ஒரு தாக்கம் இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடி மகிழ வேண்டும். பசில் ஜோசப், டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்," என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும் போது, "தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறேன். எல்லாரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். என்டர்டெயின்மென்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். மலையாளத்தில் இந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தின் வசனம் மலையாளம் - தமிழ் என்று மொழி பெயர்ப்பு செய்வதை தாண்டி அதிக மெனக்கெடலுடன் வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு எழுதப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி," என்றார்.


பசில் ஜோசப் பேசும் போது, "எல்லாருக்கும் வணக்கம், இந்தப் படத்திற்கு தமிழில் நான் தான் டப்பிங் செய்துள்ளேன். இதனால் தமிழ் தெரியும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறு வயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன். தற்போது இதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள், கலாச்சாரத்துடன் ஒற்றுப் போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம். படத்தில் தமிழ் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் அவர் விரும்பவில்லை. இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். தமிழில் டப் செய்யும் போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது, பிறகு தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர். உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழில் கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை சென்னை வந்த போது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். நடிப்பு, இயக்கம் இரண்டிலும் எனக்கு இயக்கம் தான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பின் போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது, இயக்கத்தின் போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை போன்றதாகும். எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை, இரண்டையும் ஒருசேர செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்," என்றார்.


இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும் போது, "அனைவருக்கும் வணக்கம், திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர். பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர். அவர் கமிட் செய்யும் எந்தவொரு விஷயத்திற்கும் அதீத உழைப்பை கொடுப்பார். இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போதும், அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிக பொறுப்பு கூடியிருக்கிறது. பெரிய ஃபிரான்சைஸ், அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும் போது ரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள், கோப்பையை வெல்லுங்கள், தட்றோம், தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன். சிறு வயதில் நிறைய தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்து இருக்கிறேன். தற்போது தமிழ் நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறி இருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், உணவு அற்புதமாக இருந்தது, என்றார்.

No comments:

Post a Comment