Featured post

28 YEARS LATER Horror Releasing around the world from

 28 YEARS LATER Horror Releasing around the world from June 18, 2025 Academy Award®-winning director Danny Boyle and Academy Award®-nominate...

Tuesday, 30 March 2021

தேன் மழை பொழியும் “தேன்” படத்தின் வரவேற்பில், பூரிக்கும் நடிகை

தேன் மழை பொழியும் “தேன்” படத்தின் வரவேற்பில், பூரிக்கும் நடிகை அபர்ணதி !

சமீபத்தில் வெளியான “தேன்” திரைப்படம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அனைவரது கவனம் குவித்த படமாக மாறியிருக்கிறது. அனைத்து தரப்பிலிருந்தும் படத்திற்கான பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.  “தேன்” படத்தில் பூங்கொடி பாத்திரத்தில் அசத்தியிருக்கும் நடிகை அபர்ணதி, அதீத பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். படத்தின் ஆத்மாவை நிலைநிறுத்தும் நடிப்பு எனறும் படத்திற்கான முதுகெலும்பாக அவரது நடிப்பு இருப்பதாகவும் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.






படத்தில் நடித்தது குறித்து, நடிகை அபர்ணதி பகிர்ந்துகொண்டதாவது...


“தேன்” படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் அவர்களையே சேரும்.  இந்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்ய முழுக்காரணமும் அவர்கள் தான்.  மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாக பிரதிபலிக்கும் பொருட்டு, படத்தின் போது ஷாம்பு, மேக்கப்  என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்கள் தான் பரிந்துரைத்தார்கள். மலைப்பகுதியில் இருந்த போது நான் அந்த பகுதி பெண்போலவே மாறினேன். படத்தின் பெரும்பகுதி கதை நடக்கும், ஜெயில் காட்சிகள் கண்ணகிநகரில் நடைபெற்றது. அதற்கு நேர்மாறாக படத்தின் மற்ற பகுதிகளை படம்பிடிக்க பல வித்தியாசமான இடங்களுக்கு பயணித்தோம். தேனியின் உட்புற மலைப்பகுதி கிராமங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தினோம். நாங்கள் படம்பிடித்த மலைப்பகுதி கிராமத்தில் வெறும் 28 குடும்பங்கள் மட்டுமே இருந்தது. எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லை. அங்கிருப்பவர்கள் எந்த ஒரு அத்தியாவசிய தேவைக்கும், 3 மணி நேரம் செலவழித்து 9 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். மேலும் சில காட்சிகளை தேனியில் ஒரு நிஜமான அரசு மருத்துவமனையில் நடத்தினோம். அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் மூணாறு பகுதிகளில் நடத்தினோம். மொத்தமாக 30 லிருந்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். மொத்த படப்பிடிப்பும் மிக அற்புதமான அனுபவமாக இருந்தது.  நடிப்பு திறமையை வெளிப்படுத்தும்  சவாலான  பாத்திரம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. படம்  உலகம் முழுக்க நிறைய திரைவிழாக்களில் கலந்துகொண்டு 48 விருதுகள் வரை வென்றுள்ளது. திரையரங்கில் படம் பார்த்தவர்களும் விமரசகர்களும் என் நடிப்பை குறிப்பிட்டு பாராட்டி தேசிய விருது கிடைக்கும் என கூறியிருப்பது பெரும் ஆசிர்வாதம்.


அபர்ணதி தற்போது அறிமுக இயக்குநர் இயக்கத்தில், Big Print Pictures , IB கார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழக தேர்தலுக்கு பிறகு தொடங்கவுள்ளது. மேலும் அவருக்கு தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களிலிருந்தும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

No comments:

Post a Comment