Featured post

தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய்

 *தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் !!* *சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீட...

Tuesday 18 August 2020

அதிரடி இயக்குநர் ஓம் ரவாத்தும்

அதிரடி இயக்குநர் ஓம் ரவாத்தும் அதிரிபுதிரி ஆக்ஷன் ஹீரோ பிரபாஸும் பூஷன்குமாருடன் கைகோர்த்துக் களம் இறங்கும் அதிசயம் நிகழப்போகிறது! ‘ஆதிபுருஷ்’  என்ற பிரம்மாண்டமான அற்புத வரலாற்றுத் திரைப்படக் காவியத்துக்காக உருவாகி இருக்கிறது இந்த மெகா கூட்டணி!

டி- சீரிஸின் தலைமை நிர்வாக இயக்குநரான பூஷன் குமார், ‘டன்ஹாஜி – தி அன்சங் வாரியர்’ திரைப்பட இயக்குநர் ஓம் ரவாத், சூப்பர் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் ரெட்ரோஃபிலிஸ் நிறுவனந்த்துடன் இணைந்து உருவாக்கும் மாபெரும் வரலாற்றுச் சாஸனம்தான் 3D  தொழில்நுட்பத்தில் தயாராகும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம்! இது இந்திய வரலாற்றுப் பின்னணியைத் தழுவி, அநீதிக்கு எதிரான நியாயத்தின் போராட்டத்தை மையமாகக்கொண்டு பின்னிப் பிணையப்பட்ட உன்னதப் படைப்பு!

கண்ணுக்கு விருந்தான டன்ஹாஜியை இயக்கிய அதிரடி இயக்குநர் ஓம் ரவாத், ரெட்ரோஃபிலிஸ் அமைப்பின் நிறுவனர் ஆவார். இவரது இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ், வானமே எல்லையாகக் கொண்ட வண்ணக் காவியம்; ஏராளமான பொருட் செலவில், உன்னதமான படைப்பாற்றல் மிக்க பின்னணிகளுடனும், இணையற்ற VFX தொழில்நுட்பத்துடனும் மகிழ்விக்கபோகிறது.

ரவாத்துக்கு உறுதுணையாக இருப்பவர் பூஷண்குமார் (டி சீரிஸ்). ரெட்ரோஃபிலிஸ் நிறுவனத்துடன் இணைந்து, தமது கனவுகளுக்குத் திரை வடிவம் அளிக்கிறார்.

பாகுபலி அளித்த மாபெரும் வெற்றிக்குப் பின்னர், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாத்திரத்தை ஏற்று பிரபாஸ் சிறப்பிக்கிறார்.

ஓம் ரவாத்தின் இந்த மாபெரும் திரைக் காவியம், இந்தியக் கலாசாரத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு, ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படும். 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்த பிரம்மாண்டப் படைப்பு தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கோலாகலமாக வெளியிடப்படும். பாலிவுட்டைக் கலக்கும் பெரும் புள்ளிகளில், வில்லனாக இந்தப் படத்தில் யார் நடிக்கப்போகிறார் என்பது குறித்தான பரபரப்பான யூகங்கள் திரையுலக வட்டாரத்தில் அலையடிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!
‘ஆதிபுருஷ்’ படம் பற்றி பிரபாஸ் என்ன சொல்கிறார்?

“ஒவ்வொரு வேடமும், ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கான சவால்களைக் கொண்டிருக்கும். ஆனால் இதில் உள்ளதுபோல ஒரு பாத்திரத்தைச் சித்தரிப்பது,  எராளமான பொறுப்பு மற்றும் பெருமையைத் தருவதாகும். நமது வரலாற்றுப் பாத்திரத்தைப் பிரதிபலிப்பது எனக்குப் பெருமளவு உற்சாகத்தை அளிக்கிறது. குறிப்பாக ஓம் இதை வடிவமைத்திருக்கும் விதம் அதிசயப்படவைக்கிறது. நமது நாட்டு இளைஞர்கள அனைவரும் தங்களது பேரன்பை எங்கள் திரைப்படத்தின் மீது பொழிவார்கள் என்பது நிச்சயம்!”


இந்தப் படத்தைத் தமக்கு மிக நெருக்கமான ஒன்றாக உணர்வதாக பூஷண்குமார் சொல்கிறார். மேலும், “நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு படைப்பும் எங்கள் இதய வீணையின் நரம்பை மீட்டுவதாகவே இருக்கும். ‘ஆதிபுருஷ்’ கதையை ஓம் என்னிடம் சொன்னபோது, இந்த கனவுப் படைப்பில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் இழந்துவிடக்கூடாது என்றே உணர்ந்தேன். என் தந்தையைப் போலவே நானும் என் குடும்பத்தினரும் நமது பாரம்பரியக் கதைகள் மற்றும் வரலாறு ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள். குழந்தைப் பருவத்தில் இருந்தே அது போன்றவற்றைக் கேட்டு வளர்ந்தவர்கள். கதையை ஓம் சொன்னவுடனே இந்த வரலாற்றுக் காவியச் சித்திரத்தில் நானும் ஓர் அங்கமாக இருப்பேன் என்பதை உணர்ந்துகொண்டேன். தாங்கள் நம்பும் ஒரு வரலாற்று நிகழ்வை கண்கவர் காட்சிகளோடும், மாபெரும் பாத்திரப் படைப்புகளோடும் பெரிய திரையில் கண்டு அனுபவிக்க ரசிகர்கள் தயாராகலாம்.”
ஓம் ரவாத் பேசும்போது, “என்னுடைய சிந்தையில் பதிந்திருந்த இந்தப் பாத்திரத்தை ஏற்கச் சம்மதித்த பிரபாஸுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய கனவுப் படைப்பை நனவாக்க, நிபந்தனையற்ற ஆதரவை அளித்த பூஷன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகட்டும். ஏராளமான ஈடுபாட்டோடும் பெருமையோடும் இந்தக் கலைப் பயணத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்; இது போன்றதொரு அனுபவத்தைத் தாங்கள் இதுவரைபெற்றதில்லை என்ற உணர்வை எங்கள் ரசிகர்கள் நிச்சயம் அடைவார்கள் என்ற உறுதியை நாங்கள் அளிக்கிறோம்” என்றார்.

சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களுக்குப் பிறகு பூஷண்குமாருடன் பிரபாஸ் இணையும் மூன்றாவது திரைப்படம்தான் ‘ஆதிபுருஷ்’. ஓம் ரவாத்துடன் பிரபாஸ் கைகோர்க்கும் முதல் படமும் இதுதான். இந்த மூவர் கூட்டணி, ஒரு வெற்றிக்கூட்டணி என்பதை நிச்சயம் நிரூபிக்கும்!

பூஷண்குமார், கிருஷ்ணன்குமார், ஓம் ரவாத், பிரசாத் சுடர் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம் தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய கட்டத்தில் இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் ஆரவாரமாகத் திரையரங்குகளுக்கு வரும்.

No comments:

Post a Comment