Featured post

Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan

 *'Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan has popular Malaysian actor Yuvaraj Krishnasam...

Wednesday 30 November 2022

என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி: அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள 'வதந்தி

 *என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில்  மட்டற்ற மகிழ்ச்சி: அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள 'வதந்தி' ட்ரைலரில் பாராட்டுகளைக் குவித்த குமரன் தங்கராஜன் பெருமிதம்*


ப்ரைமில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தான் 'வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திருப்பங்களுக்கு குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக் களத்தை 'வதந்தி' தரும் என்று எதிர்பார்த்துள்ளனர். இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சொல்லப்போனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தில் அவரது முதல் சீரிஸ் இது. மொத்தம் 8 எபிஸோட்கள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் குமரன் தங்கராஜனும் நடிக்கிறார். தமிழகத்தில் குமரன் தங்கராஜன் நன்கு பரிச்சியமான நடிகர்தான். அவரை 'வதந்தி' ட்ரெய்லரில் பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் இந்த கதாபாத்திரம் சீரிஸில் எப்படி பயணிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.



குமரனை இதற்கு முன்னர் டிவி ஷோக்கள், திரைப்படங்களில் ரசிகர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் பாத்திருக்கின்றனர். ஆனால் 'வதந்தி' குமரனை முற்றிலும் வித்தியாசமாக முன்னிறுத்துகிறது. ட்ரெய்லரிலேயே குமரனுக்கு அமோக வரவேற்பு இருப்பதால் சீரிஸ் வெளியான பின்னர் அவரது திறமை இன்னும் அதிகமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 240 நாடுகளில் எல்லைகள் கடந்து பேசப்படும் என்று கணிக்கப்படுகிறது. 


இந்நிலையில் குமரன், "தமிழக மக்களின் அன்பை நிறைவாகப் பெற்றுள்ளேன். இப்போது எனது திறமை கடல் கடந்து உலக நாடுகளுக்குச் செல்வதை நினைத்து அதீத மகிழ்ச்சியில் உள்ளேன். 'வதந்தி' பார்த்துவிட்டு மக்கள் சொல்லவிருக்கும் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்" என்று குறியுள்ளார்.


மேலும், ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் வரவேற்புக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறும் குமரன், "எனது ரசிகர்கள் ட்ரெய்லரைக் கொண்டாடுகின்றனர். ரசிகர்களின் அன்பு நிறை குறுந்தகவல்களால் நனைந்து வருகிறேன். எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவுக்கும் அவர்கள் அன்பை காட்டி வருகின்றனர். உண்மையிலேயே இந்த வரவேற்பால் நான் திக்குமுக்காடிப் போயுள்ளேன்" என்றார்.


அண்மையில் 'வதந்தி' அறிமுக விழா சென்னையில் நடந்தது. அப்போது குமரன் தங்கராஜன் கருப்பு நிற ஆடையில் புன்னகையுடன் வீற்றிருந்தது கவனம் ஈர்த்தது.


வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பேனரில் புஷ்கர் காயத்ரி 'வதந்தி' சீரிஸை தயாரித்துள்ளனர். கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். இந்த சீரிஸ் மூலம் சஞ்சனா நடிகையாக அறிமுகமாகிறார். இவர் வெலோனி என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். டிசம்பர் 2ஆம் தேதி முதல் 'வதந்தி' ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*

 *உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*


*சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*


இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.



'கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.


யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை செய்திராத கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.

நடிகர் அல்லு அர்ஜூனின் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமான ‘புஷ்பா

 *நடிகர் அல்லு அர்ஜூனின் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமான ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது!*


நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்புப் பெற்று, வெற்றிக்கான உதாரணமாகவும் திகழ்கிறது. இந்தத் திரைப்படம் பல மொழிகளில் வெளியான முதல் நாளில் இருந்து  பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதனைப் படைத்து வருகிறது. எல்லைத் தாண்டிய ரசிகர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம் தற்போது ரஷ்ய சினிமா சந்தையில் வருகிற டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியாக இருக்கிறது.



‘புஷ்பா- தி ரைஸ்’ திரைப்படம் ரஷ்யாவில் தற்போது பிரம்மாண்டமான வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. பல மொழிகளில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரைய்லர் தற்போது ரஷ்ய மொழியிலும் வெளியாகி உள்ளது. 

https://www.instagram.com/reel/CliJGAyj8aS/?igshid=YmMyMTA2M2Y=

ரஷ்யாவின் மாஸ்கோவில் டிசம்பர் 1ம் தேதி மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் டிசம்பர் 3ம் தேதியும் நடிகர்கள் மற்றும் படக்குழு முன்னிலையில் படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. மேலும், ரஷ்யாவின் 24  நகரங்களில்  நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் ’புஷ்பா’ திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. 


ரஷ்யாவில் ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்புக் காரணமாகவே தேசம் தாண்டியும் தற்போது சென்றடைந்துள்ளது. ‘புஷ்பா’ படம் தொடர்பாக படக்குழு வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியிடுமா என ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

15ம் ஆண்டில் தங்கர் பச்சானின் "ஒன்பது ரூபாய் நோட்டு" !

 15ம் ஆண்டில் தங்கர் பச்சானின் "ஒன்பது ரூபாய் நோட்டு" !

சத்யராஜை பெருமைப் படுத்திய படம்!!


எனது 25 ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996 ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007 ஆம் ஆண்டில் "ஒன்பது ரூபாய் நோட்டு" திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன். அவ்வாறே இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றினர்.



சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி, நடன இயக்குநர் சிவசங்கர் என அனைவரும் இந்தப் பாத்திரங்களாகவே எக்காலத்துக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.


பரத்வாஜ் இசை, வைரமுத்து பாடல்கள், லெனின் படத்தொகுப்பு, ஜாக்கி கலை இயக்கம் அனைத்துமே ஈடு இணையற்றவைகள்.


தமிழ் மரபின் குடும்ப உறவுகள், உழவுக் குடும்பத்தின் சிக்கல்கள், சினிமாத்தனமற்ற உரையாடல்கள் என அனைத்தும் கொண்ட இவ்வாறான நம் மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம். நான் மட்டும் நினைத்தால் அவைகள் இடேறாது.


எழுத்தில் உயிர் வாழ்ந்த ஒன்பது ரூபாய் நோட்டு உயிர் ஓவியமாக, திரைப்படமாக வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மருத்துவர் கணேசன் அவர்களை என்றென்றும் மறவேன்.


- தங்கர் பச்சான்

ஸ்ரீராமரின் ஆசி பெறுவதற்காக அயோத்தி சென்ற ‘ஹனு-மேன் படக்குழு

 *ஸ்ரீராமரின் ஆசி பெறுவதற்காக அயோத்தி சென்ற ‘ஹனு-மேன் படக்குழு*


விரைவில் வெளியாகவிருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தனர்.



படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் அசல் இந்திய சூப்பர் ஹீரோ படைப்பு 'ஹனு-மேன்'. இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி, வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.


'ஹனு-மேன்' படத்தின் டீசருக்கு கிடைத்த ஆதரவால் மனம் மகிழ்ந்த பட குழுவினர்,  ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இவர்களின் இந்த ஆன்மீக பயணம், அடுத்தக்கட்ட விளம்பரத்தை தொடங்குவதற்கானது என தயாரிப்பு தரப்பு  தெரிவித்திருக்கிறது.


வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரமான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, கெட்டப் சீனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தினை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். தற்போது இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

 *விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*


*இந்தப்படம் இளையதலைமுறையினரிடத்தில் கனவு காணவேண்டியதன் அவசியத்தை கற்றுத் தருகிறது.* -

*இயக்குநர் ரிஷிகா சர்மா*


*மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான் சரித்திரம் தான் ‘விஜயானந்த்’* -

*பாடலாசிரியர் மதுரகவி*


*“சினிமா என்பது கலை. வியாபராமல்ல”* -

*நாயகன் நிஹால்.*



சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்  தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்'எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது.








‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். 


இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன் படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதன் போது படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா, தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர், நடிகர்கள் நிஹால், பரத் போப்பண்ணா, தமிழ் பதிப்பின் வசனம் மற்றும் பாடல்களை எழுதிய மதுரகவி, படத்தொகுப்பாளர் ஹேமந்த், படத்தை வெளியிடும் யூ எஃப் ஓ பிரதிநிதி மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா பேசுகையில், '' கன்னட திரை உலகில் தயாராகி இருக்கும் முதல் சுயசரிதை திரைப்படம். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பணிகள், ஒரு கன்னட திரைப்படமாகத் தான் தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, படப்பிடிப்பை பார்வையிட்ட திரையுலக பிரபலங்கள், இந்த திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக உருவாக்கலாமே..! என ஆலோசனை வழங்கினர். அதன் பிறகு தயாரிப்பாளரின் சம்மதத்துடன் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படமாக தயாரானது. 'விஜயானந்த்' படத்தின் டீசர் வெளியான பிறகு, மும்பையில் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இதனை இந்தியில் வெளியிடலாமே..! என்றனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு பல நாடுகளிலிருந்து இந்தப் படத்தை இங்கும் வெளியிடலாமே..! எனக் கேட்டனர். இதனால் தற்போது ‘விஜயானந்த்’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகிறது.


ஊக்கமளிக்கும் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் நிஜ கதாநாயகன் தொழிலதிபர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வர் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண பெண்மணியான என்மீது நம்பிக்கை வைத்து, இது போன்ற பிரம்மாண்டமான படைப்பை உருவாக்க வாய்ப்பளித்த வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஆனந்த்  சங்கேஸ்வருக்கும் நன்றி.


நான் இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகை. அவரது இயக்கத்தில் வெளியான ‘குரு’ திரைப்படத்தை பார்த்த பிறகு தான், சுயசரிதை திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நான் எந்த திரைப்பட பயிற்சி கல்லூரியிலும் படித்த மாணவி அல்ல. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘குரு’ எனும் திரைப்படத்தின் திரைக்கதையில் நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கும் பல அடுக்குகளை உணர்ந்து வியந்திருக்கிறேன். மேலும் மணிரத்னம், புட்டண்ணா கனகல் போன்ற இந்திய படைப்பாளிகளிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றிருக்கிறேன். இந்தத் திரைப்படம் உருவானதற்கு மணிரத்னத்தின் திரைப்படங்களே முன்னுதாரணம். இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்த இரண்டாவது திரைப்படத்தை, சுயசரிதை போன்ற சவால் மிக்க படைப்பாக இயக்கியிருப்பதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தமிழ் பதிப்பின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் மதுரகவி உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கும், நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்ப  உறுப்பினர்களுக்கு இடையேயான உணர்வுகளை விவரிக்கும் திரைப்படமாக இந்த ‘விஜயானந்த்’ உருவாகி இருக்கிறது. குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் மூத்த உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இடையேயான பாச பிணப்பை மையப்படுத்தி இருந்தாலும், பிள்ளைகளின் எதிர்கால கனவுகளுக்கும், அவர்களின் எதிர்கால கனவுத்திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விவரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையினரிடத்தில் எதிர்காலம் குறித்த கனவை காண வேண்டியதன் அவசியத்தைக் கற்றுத் தருகிறது.


1976 ஆம் ஆண்டின் ஒரேயொரு வாகனத்துடன் தொடங்கிய இவரது கனவு, இன்று இந்தியா முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுடனும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்களுடனும் வளர்ச்சி அடைந்து, அவரை சாதனை நாயகனாக்கியிருக்கிறது. அவரது கனவு நனவாகி இருக்கிறது. இது தொடர்பாக அவரிடம் இந்த துறையை தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என கேட்டபோது, ‘இது எனக்கு ஏற்றது என எண்ணினேன். உடனடியாக தொடங்கினேன்’ என பதிலளித்தார். இது எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. இதனை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினேன். 


‘விஜயானந்த் ரோட் லைன்ஸ்’ என்ற அவரது நிறுவனத்தின் பெயரில் இருக்கும் ‘விஜயானந்த்’தை இப்படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ‘விஜய்’ என்றால் ‘வெற்றி’, ‘ஆனந்தம் என்றால் சந்தோஷம்’. படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மனதளவில் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் இந்த திரைப்படம் வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்.'' என்றார்.


படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பேசுவையில், '' விஜயானந்த் படத்தினை அறிமுகப்படுத்துவதற்காக அஹமதாபாத்,, லக்னோ, இந்தூர், டெல்லி, கொச்சி, ஹைதராபாத் ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சென்னைக்கு வருகைத்தந்திருக்கிறோம். சென்றமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி.


நான் ஒரு வயதாக இருக்கும் போது என்னுடைய தந்தை விஜய் சங்கேஸ்வர் குடும்பத் தொழிலிலிருந்து விலகி, வி ஆர் எல் எனும் இந்த வாகன போக்குவரத்து துறையில் 1976 ஆம ஆண்டில் ஈடுபட தொடங்கினார். தற்போது நாங்கள் ஏழு லட்சம் தொழில் முறையிலான வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறோம். விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த பொருட்கள் ஜவுளிகள், ஆயத்த ஆடைகள், மருந்து பொருட்கள், அகர்பத்தி காலணிகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் என ஆண்டுதோறும் பத்தாயிரம் டன் எடையுள்ள சரக்குகளை கையாளுகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1500 கிளைகளுடன் இயங்கி வருகிறோம். தமிழகத்தில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.


இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குனர் ரிஷிகா சர்மாவும், நாயகன் நிஹாலும் கொரோனா தொற்று காலகட்டத்தில் தந்தையை  சந்தித்தனர். 30 நிமிட சந்திப்பு என்று கூறி தொடங்கிய இவர்களது பேச்சுவார்த்தை, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இவர்கள் திரைக்கதையை விவரித்த விதம், அதற்கான மெனக்கடல்கள்.. என அனைத்தும் என்னுடைய தந்தையாருக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு எங்களது நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இந்த படத்தின் உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தத் திரைப்படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் 99 சதவீதம் இடம் பிடித்திருக்கிறது. ஒரு சதவீதம் படைப்பு சுதந்திரத்திற்காகவும், திரைப்படத்திற்கான வடிவமைப்பிற்காகவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளை சொல்லலாம்.'' என்றார்.


பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதுரகவி பேசுகையில், '' மஞ்சள் வண்ண லாரியின்‌ மகத்தான சரித்திரம் தான் இந்த படத்தின் கதை. ‘கே ஜி எஃப்’ படத்தைப் போல் இது கமர்சியல் படமல்ல. நிஜ நாயகனை பற்றிய படம். வியாபாரமும், அரசியலும் ஆதிக்கம் செலுத்தும் இந்த மண்ணில், யதார்த்தமான வாழ்க்கையை முன்னிறுத்தி, குடும்ப உறவுகளுக்கான முக்கியத்துவத்தை மக்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் இப்படம் உருவகியிருக்கிறது. இயக்குநரின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன். படத்தில் இடம்பெறும் அனைத்து காட்சிகளிலும்  மன நிறைவுடன் பணியாற்றிருக்கிறோம். இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில் பணியாற்றும்போது படக் குழுவினர் எமக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கினார்கள். 


படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. பாடல்கள் காட்சிகளுக்கு இடையேயான திணிப்பாக இல்லாமல், இயல்பாக இடம் பெற்று இருக்கிறது. இன்று கடைக்கோடியில் வாழும் பாமர மனிதனுக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் எப்படி ஜெயிப்பது? என்று தெரியாமல், தன்னம்பிக்கையிழந்திருப்பவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கும். வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து ஒருவர் எப்படி வென்றார் என்பதை நான்கு தலைமுறைகளை சம்பந்தப்பட்ட கதையாக தயாராகியிருக்கிறது.  நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையையும் இந்த படத்தில் சரியாக பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த படத்தில் நிறைய செய்திகள் இருக்கிறது.'' என்றார்.


நாயகன் நிஹால் பேசுகையில், '' இந்த விஜயானந்த் திரைப்படம் நான் கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படம். நான் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கினேன். நான் ஒரு மேடை நாடக நடிகரும் கூட. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி தொடரிலும், சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கிய ‘ட்ரங்க்’ படத்தில் நான் நாயகனாக அறிமுகமானேன். இருவரும் 2019 ஆம் ஆண்டில் அடுத்த படமாக வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். சுயசரிதை திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்றால், அதற்கு மூல காரணம் என்னுடைய குருவாக நினைத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் மணிரத்னம் தான். அவர் இயக்கத்தில் வெளியான குரு திரைப்படத்தை பார்த்த பிறகு தான் எங்களுக்கும் இது போன்றதொரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பார்த்த முதல் சினிமா குரு. அது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் டாக்டர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். 


விஜய் சங்கேஸ்வர் சாதித்த சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள் அனைத்தும் எனக்கு வியப்பை அளித்தது. இதற்காக ஆறு மாதங்கள் ஆய்வு செய்து திரைக்கதை உருவாக்கினோம். அப்போது எங்களிடத்தில் தயாரிப்பாளர்கள் இல்லை. அதன் பிறகு விஜய் சங்கேஸ்வரை சந்தித்தோம். அவரை சந்தித்தவுடன், ‘உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறோம்’ என சொன்னோம். ஒரு நிமிடம் அமைதி காத்தார். ‘நான் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனும் அல்ல. பிரபலமான திரைப்பட நடிகரும் அல்ல. பிறகு ஏன் என்னுடைய சுயசரிதையை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்டார். அப்போது நாங்கள், ‘எங்களைப் போன்ற திரைப்பட நடிகர்கள் எல்லாம் திரையில் தான் நாயகர்கள். ஆனால் உங்களைப் போன்றவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள். உங்களின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் முன்னுதாரணம் நட்சத்திரமாக இருக்கிறீர்கள்.’ என பதிலளித்தோம். அதன் பிறகு தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நீண்டது. அதன் பிறகே அவர் சம்மதித்தார்.. படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார். 


நான் ஒரு நட்சத்திர நடிகரல்ல என்றாலும், கதை மீதான நம்பிக்கையின் காரணமாக.. என்னை கதையின் நாயகனாக தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் ஏற்றுக்கொண்டார். எங்கள் படக்குழு வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் உள்ளடக்கியது. எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து படத்தை உருவாக்கவும் வாய்ப்பளித்தார். ஏனெனில் சினிமா என்பது ஒரு கலை. வியாபாரம் அல்ல. இதனை உணர்ந்து கலை வடிவத்திற்குரிய மரியாதையும் அவர் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு

 ’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் 


ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு


-டிரைலர் வெளியீட்டு விழாவில் அம்ரிஷ் பேச்சு



”குடியால் கெடும் குடும்பங்கள்” முதல்வருக்கு கே.ராஜன் வேண்டுகோள்



”100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் 

சினிமா நல்லா இருக்காது”


’பாம்பாட்டம்’ விழாவில் போட்டு தாக்கிய கே.ராஜன்


‘ஓரம்போ’, ‘வாத்தியார்’,  ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள  ‘பாம்பாட்டம்.’


வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.  இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை வெளியிட்டார்.




















































விழாவில் இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசியபோது,


“இந்தப் படத்தில் பெரிய அனிமேஷன் பாம்பு வருகிறது. பாம்பு வரும் காட்சிக்கான பின்னணி இசையை அமைத்தபோது அந்த சத்தத்தை கேட்டுவிட்டு என ஸ்டுடியோவுக்குள் நிஜமான பாம்பே வந்துவிட்டது. இந்த படத்தின் இயக்குனர் வடிவுடையானுடன் ‘பொட்டு’ படத்திலிருந்து தொடர்பு ஏற்பட்டது.  இந்தப் படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார். நடிகர் ஜீவன் அடுத்த கட்டத்துக்கு போகிற மாதிரியான நடிப்பை கொடுத்திருக்கிறார். எனக்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நன்றி” என்றார்.


நடிகர் சரவணன் பேசியபோது


 “ ‘பாம்பாட்டம்’ படம் பார்த்துட்டு நான் மிரண்டுவிட்டேன். பெரிய டைரக்டர் ஆகவேண்டும் என்ற வடிவுடயானின் கனவு, இந்தப்படத்தில் நனவாகும். பான் இந்தியா படமான இதில் நானும் ஒருவனாக நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”என்றார்.


இயக்குனர் ஏ.வெங்கடேஷ் பேசியபோது, “இந்தப்படத்தின் டிரைலரும் பின்னணி இசையும் நல்லா வந்திருக்கு. பழனிவேல் சார் தயாரிப்பில் அடுத்ததாக நான், ‘ரஜினி’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். பாம்பை வைத்து எடுத்தப் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இந்தப்படம் பெரிய வெற்றி அடையும்”என்றார்.


படத்தின் நாயகன் ஜீவன் பேசியபோது,


“படம் வருவதற்கு முன்பே டிரைலர் பேசப்படுகிறது. இந்த கதை புதிய கோணத்தில் இருக்கும். இது நான் நடிக்கும் முதல் பீரியட் படம். இயக்குனர் வடிவுடையானின் உருவத்துக்கும் அவருடைய நடவடிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது. ’பாம்பாட்டம்’ யாராலும் தீர்மானிக்கமுடியாத படமாக வெளிவரும்”என்றார்.


தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசியதாவது :-


இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பழனிவேல் முன்பின் தெரியாதவர்களுக்குகூட உதவி செய்யும் நல்ல மனசுக்காரர். ”தர்மம் தலை காக்கும்..” என்று புரட்சி தலைவர் பாடியதை போல மனிதன் செய்யும் பாவ அழுக்குகள் போக வேண்டுமென்றால் தர்மம் செய்யவேண்டும். ‘பாம்பாட்டம்’ படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் வடிவுடையான் பெரிய அறிவுடையான்; மிகச்சிறந்த ஆற்றல் உடையான்; அந்த வடிவுடை அம்மனின் அருள் உடையான். இப்படிப்பட்ட படங்களை இறைவன் அருள் இல்லாமல் எடுக்க முடியாது. 


இயக்குனர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். இன்றைக்கு பலகோடி சம்பளம் வாங்கும் நடிகர்களை; களிமன்னாக இருந்தவர்களை செதுக்கி நடிகனாக உருவாக்கியது இயக்குனர்கள்தான். நடிகர், நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கு வரவேண்டும். 50 கோடி, 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களால் சினிமா நல்லா இருக்கும் என்று அர்த்தம் இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைத்தால்தான் சினிமா நல்லா இருக்கும்.


இன்றைக்கு தமிழ்நாட்டில் குடியால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கெட்டு குட்டிச்சுவராய் போய்விட்டது. நான் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். குடலையும் குடும்பத்தையும் கெடுக்கும் மது வேண்டாம். அரசாங்கத்திற்கு வேறு வகையில் வருவாய் ஈட்டிக்கொள்ளுங்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் திறமைசாலி எதிர்காலத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்வார்.”


நிறைவாக இயக்குனர் வி.சி.வடிவுடையான் பேசியபோது,


“ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எனது நன்றி. இந்த படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம். நான் கடுமையாக உழைப்பதாக சொல்கிறார்கள். ஒரு இயக்குனர் கடினமாக உழைத்துதான் ஆகவேண்டும். நான் எப்போதும் தயாரிப்பாளர் பக்கம்தான் நிற்பேன். தயாரிப்பாளருடன் இணைந்து நிற்கும்போதுதான் அவருடைய பிரச்சனைகள் தெரியும். இந்தப் படத்தின் கதைக்காக மூன்று வருடங்கள் உழைத்தேன். பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பெரிய படமாக ‘பாம்பாட்டம்’ இருக்கும். அடுத்து என்ன என்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை சுவாரஷ்யமாக இருக்கும்” என்றார்.


நிகழ்ச்சியில் நடிகைகள் சாய் ப்ரியா, ரித்திகா சென், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். சிறப்பு விருந்தினர்களுக்கு தயாரிப்பாளர் பழனிவேல், பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியை ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார்.