Featured post

நடிகர் ஜீவா ரவி பேசியதாவது..,

 நடிகர் ஜீவா ரவி பேசியதாவது..,  “பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கம். நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை என்...

Friday, 28 August 2026

நடிகர் ஜீவா ரவி பேசியதாவது..,

 நடிகர் ஜீவா ரவி பேசியதாவது.., 








“பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கம். நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தப் படத்திற்காக அனைவரும் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.


யங் கிரியேட்டர், யங் ஹீரோ, யங் புரொடியூசராக இருக்கும் ஆண்டனியை உங்கள் சார்பாக வரவேற்கிறேன். அதேபோல், புதிய முகமாக அறிமுகமாகும் மதுமிதாவுக்கும் வாழ்த்துகள். நல்ல கிரியேட்டர்களும் தயாரிப்பாளர்களும் வரும்போது கலைஞர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் வழக்கமான அப்பா கதாபாத்திரத்தைவிட வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான அப்பாவாக நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஆண்டனிக்கு நன்றி. கவிஞர் கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் மிகவும் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கின்றன. இரண்டு இசையமைப்பாளர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் பியட்ரோ வில்லானி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆதம் நாசர், நவ்யா சுஜி உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் சரியான இடத்திற்கும், சரியான ரசிகர்களிடமும் சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.”


கலை இயக்குநர் கே.கே. சுரேந்தரன் பேசியதாவது.., 


“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். இது எனக்கு நான்காவது படம். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி அவர்களுக்கு மிகுந்த நன்றி. ஒரு அழகான காதல் டிராமாவை மிகவும் கவித்துவமான முறையில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறோம். என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைத்துறை நண்பர்களுக்கும், இந்த வாய்ப்பை வழங்கிய சந்தோஷ், ஹரிஷ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”


நடிகர் ஆலம் ஷா பேசியதாவது.., 


“இங்கு வந்திருக்கும் அனைத்து மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் வணக்கம். நான் BOFTA Film Institute-ல் நடிப்பு பயிற்சி பெற்றவன். இந்தத் தொழிலை சரியான முறையில் கற்றுக்கொடுத்த என்னுடைய வழிகாட்டியும், ஆசிரியருமான தனஞ்செயன் சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி அவர்களுக்கும், என்னுடன் நடித்த ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, கதாநாயகி உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நன்றி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு குழுவாக இருந்தது. நான் இதற்கு முன்பு பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் பரபரப்பு இங்கு இல்லை. முதலில் வசனங்களை கொடுத்து, நன்றாக ரிகர்சல் செய்த பிறகே டேக் சென்றோம். இயக்குநர் ஆண்டனி எங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நாங்கள் இம்ப்ரோவைஸ் செய்ய, அதிலிருந்து அவரும் தனது பங்களிப்பைச் சேர்த்தார். அதனால் திரையில் எங்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது. மேலும், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அன்றைய நாளுக்கான சம்பளம் உடனடியாக எங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதுபோன்ற விஷயங்களை மிகவும் பாராட்ட வேண்டும். அதற்காக தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இது ஒரு நல்ல ஃபீல்-குட் படமாக இருக்கும். நன்றி.”


நடிகை நவ்யா சுஜி பேசியதாவது..,


“வந்திருக்கிற அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். மேடையில் பேசுவது இதுதான் முதல் முறை என்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி சாருக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடிக்கும் படம் இது. இதில் ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். 18 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். வலுவான முன்தயாரிப்புடன் மிகவும் தொழில்முறையாக பணியாற்றிய இந்தப் புதிய குழுவுடன் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது.


காதல் கதை என்றாலும், அதை சொல்லியிருக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக இருக்கும். ஒரு பெண் எஸ்கார்ட்டுக்கும், மதுவுக்கு அடிமையான ஒருவருக்கும் இடையிலான வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும். புதிய குழுவினருக்கு உங்கள் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். நன்றி.”


இசையமைப்பாளர் ஜெய்கார் ஹரிநாத்


“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். ஆரம்பத்தில் ஒரு பாடலுக்காகத்தான் இயக்குநர் ஆண்டனி சாருடன் பயணம் தொடங்கியது. ஆனால், பாடல் பாடலாக அடுத்தடுத்து உருவாகி, ரீரெக்கார்டிங் வரை இந்தப் பயணம் தொடர்ந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி.


ஸ்கிரிப்டிங் முதல் மிக்சிங் வரை படத்தின் உருவாக்கத்தை நேரடியாக பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு தளமே மிகவும் அமைதியாகவும், சர்வதேச தரத்தில் மிகவும் தொழில்முறையாகவும் இருந்தது. அந்த சூழலில் உருவான இந்த ரொமான்டிக் டிராமா மிகவும் அழகாக வந்திருக்கிறது. இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சம் முழுவதும் லைவ் சவுண்டில் உருவாகியிருப்பது. இதனால் பார்வையாளர்களுக்கு கதாபாத்திரங்களுடன் இன்னும் நெருக்கமான, அற்புதமான அனுபவம் கிடைக்கும். என்னுடைய முதல் பாடலுக்கு கார்த்திக் நேத்தா போன்ற ஒரு சிறந்த பாடலாசிரியர் வரிகள் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் வெஸ்டர்ன் பாணியில் திட்டமிட்டிருந்த பாடலை, அவரது அழகான தமிழ் வரிகளால் வேறு ஒரு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. மற்றொரு இசையமைப்பாளரும் இந்தப் படத்தில் மூன்று பாடல்களை உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை; வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ற வகையில் இருவருடைய இசையும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் ஒரு சிறந்த இசை அனுபவமாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி, அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”


இசையமைப்பாளர் அசோக் ஸ்ரீதரன் பேசியதாவது.., 


“இயக்குநர் ஆண்டனி சார் கதையை மிகவும் ஆர்வத்துடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னிடம் விவரித்தார். முதலில் நான் பின்னணி இசைக்காகத்தான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால், கதையை கேட்ட பிறகுதான் ஒரு முக்கியமான பாடலை உருவாக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தது தெரிந்தது.


அப்படித்தான் ‘உருகாதே உயிரே’ பாடல் உருவானது. இந்தப் பாடல் தீவிரமான உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதால் பெரிய இசைக்கோவை, குறிப்பாக ஸ்ட்ரிங்ஸ் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். பாடலுக்கு மேலும் வலு சேர்க்க சிறந்த பாடலாசிரியர் தேவைப்பட்டதால் கார்த்திக் நேத்தா சாரை நான் பரிந்துரைத்தேன். சென்னை ஸ்ட்ரிங்ஸ் ஆர்கெஸ்ட்ராவை வைத்து பாடலை பதிவு செய்தது இன்னும் அழகை கூட்டியது. ‘உருகாதே உயிரே’ பாடலுக்கு இரண்டு வெர்ஷன்கள் உள்ளன. தற்போது கேட்பது ஆண் குரல் வெர்ஷன். படத்தின் முக்கியமான கட்டத்தில் பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் மற்றொரு வெர்ஷன் இடம்பெறும். ஒரே மெட்டில், வேறுபட்ட உணர்வுகளுடன் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது இயக்குநரின் அழகான யோசனை.


அதேபோல் ‘ஒரு கண்ணில் தூரம்’ பாடலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ற இசையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பணியாற்றினோம். இன்றைய சூழலில் மெலடி பாடல்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர்களுக்கான நல்ல இசை அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்று நம்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி.”


பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். இயக்குநரும் கதாநாயகனுமான டி. ஆண்டனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். மதுமிதா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதும்போது, இயக்குநர் ஆண்டனி கதையை விவரித்த விதம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. குறிப்பாக, ஒரு தனிமனிதன் போதையை நோக்கி செல்வதற்கான உளவியல் காரணங்களை இப்படம் மிகவும் தெளிவாக பேசுகிறது என்று நினைக்கிறேன்.


இந்தப் படத்தில் மதுவை ஒரு போதையாக மட்டுமே பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையில் நம்மை மயக்கத்திற்குள் தள்ளும் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் பேசுகிறது. இன்றைய வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் தொடங்கி பல விஷயங்கள் நம்மை அறியாமலேயே ஒரு விதமான போதைக்குள் வைத்திருக்கின்றன. இந்தப் படத்தில் ‘கார்த்திக்’ என்ற கதாபாத்திரத்துக்கு ‘மது’ என்ற கதாபாத்திரம் தெளிவைக் கொடுப்பது எனக்கு மிகவும் கவித்துவமான விஷயமாக இருந்தது. அந்த உணர்வுதான் பாடல்களிலும் பிரதிபலித்திருக்கிறது. குறிப்பாக ‘உருகாதே உயிரே’ பாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. இசையமைப்பாளர்கள் இருவரும் பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.


அன்றாட வாழ்க்கையில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் குறித்து இன்னும் நிறைய திரைப்படங்கள் வர வேண்டும். அந்த வகையில், ஆண்டனி ஒரு முக்கியமான விஷயத்தை அழகான கதை சொல்லல் மூலம் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு கலைஞனாகவும், சினிமா ரசிகனாகவும், தனிமனிதனாகவும் இந்தப் படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”


பழைய காதல் கதைகளின் உணர்வுப்பூர்வமான அழகை தக்கவைத்துக் கொண்டு, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


டி. ஆண்டனி கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை கவனித்துள்ளார். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். ஜோயி ரிடா பின்னணி இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.


ஒலிப்பதிவு பணிகளை ஜெய்கார் ஹரிநாத் மேற்கொள்ள, சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர்.


வரும் செப்டம்பர் 4ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment