Featured post

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

 *நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!* நிதேஷ் திவாரி இயக்கத்தில்...

Showing posts with label தமிழாற்றுப்படை. Show all posts
Showing posts with label தமிழாற்றுப்படை. Show all posts

Monday, 7 January 2019

எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வேண்டும் கவிஞர் கோரிக்கை

எல்லா அரசியல் கட்சிகளும்
தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வேண்டும்
கவிஞர் வைரமுத்து கோரிக்கை
‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொழில் அதிபர் நாகராஜன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :
தமிழாற்றுப்படை நிகழ்ச்சி திருப்பூரில் நிகழ்வது மகிழ்ச்சி. மற்ற ஊர்களையெல்லாம் நான் மூளையில் பதிவு செய்திருக்கிறேன்; திருப்பூரை மட்டும் நான் இதயத்தில் அணிந்திருக்கிறேன். பனியன் வடிவத்தில் திருப்பூர் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அப்படிச் சொல்லுகிறேன்.
சித்திரைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசித்தவரைப்போல அப்துல்
ரகுமான் கவனம் பெறாமல் போய்விட்டார். அவர் கவிதைகளைத் தமிழர்கள் போற்ற வேண்டும்.
ஒரு மொழியின் உலக அடையாளமே அது எத்தனை ஆண்டு நீண்ட இலக்கியத்தைக் கொண்டிருக்கிறது என்பதுதான். ஆண்டு வளையங்களைக் கொண்டு மரங்களின் வயதறியலாம். பற்களைப் பார்த்து மாடுகளின் வயதறியலாம். ஒரு மலையின் வயதை அது வெளியிடும் கார்பன் அளவுகொண்டு கணக்கிடலாம். அதுபோல ஒரு மொழியின் வயதை அதன் இலக்கியத்தை வைத்தே அளவிட இயலும்.
பழந்தமிழர் வாழ்வில் இலக்கியம்தான் அறம்; இலக்கியம்தான் சட்டம். இலக்கியத்தின் வழிதான் ஆட்சி செலுத்தப்பட்டது; வாழ்வு இயக்கப்பட்டது. தவறுகளைத் தண்டிக்கப் பிறந்ததுதான் பிற்காலத்தில் சட்டம். ஆனால் தவறுகளே செய்துவிடக்கூடாது என்று தடுத்ததுதான் இலக்கியம். ஓர் இனத்தின் பண்பாடும் நாகரிகமும், வீரமும் காதலும் இலக்கியத்தில் மட்டும்தான் பாதுகாப்பாகப் பதிவுசெய்யப்பட முடியும். ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிறகு இந்தியக் கல்வியில் இலக்கியம் தன் இடத்தை இழந்துகொண்டிருக்கிறது என்பது கவலை தருகிறது.
மூன்று நிமிடங்களுக்குமேல் காற்று இல்லை என்றால் மூளை இறந்துபோகும். மூன்று ஆண்டுகளுக்குமேல் இடைவெளி விட்டால்கூட இலக்கியம் மறந்துபோகும். அதனால் தொழில்நுட்பக் கல்வியிலும்கூட இலக்கியத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பது பலன்தரும் என்று தோன்றுகிறது.
தமிழ் ஒரு கடல். எல்லா நதிகளையும் உள்ளிழுத்துக்கொண்டு அது தன்மயம் ஆக்கிவிடும். பெளத்தத்தை உள்ளிழுத்துக்கொண்டு அது மணிமேகலையாய் மாற்றிக்கொண்டது. சமணத்தை உள்ளிழுத்து அது பதினெண்கீழ்க்கணக்காய்ப் பரிணாமம் பெற்றது. இஸ்லாத்தை உள்ளிழுத்து அது சீறாப்புராணமாய்ச் சிறந்தோங்கியது. கிறித்துவத்தை உள்ளிழுத்து உலகைத் தனக்கும், தன்னை உலகத்துக்கும் அறிமுகம் செய்துகொண்டது. அப்படி வந்த மதங்களெல்லாம் தமிழ் வழியாகத்தான் வினைப்பட்டனவே தவிர, தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் தங்கள் மொழியை அமர்த்திவிடவில்லை.
ஆனால் இந்த நூற்றாண்டு அச்சம் தருகிறது. எப்போதும் நேராத ஓர் உலகப் படையெடுப்பு ஒவ்வொரு தாய்மொழியின் மீதும் இப்போது நிகழ்த்தப்படுவதாய் அறிவுலகம் பதறுகிறது.  இன்றைக்குப் பெருகிவரும் ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கிராமங்கள் வரைக்கும் தமிழைக்
கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கின்றன. அதனால் முதலில் தமிழின் தரம் குறையும்; பிறகு புலமை குறையும்; பிறகு எண்ணிக்கை குறையும்; பிறகு பேச்சுமொழி ஆகிவிடும் பெருவிபத்தும் நேர்ந்துவிடும்.
சட்டத்தின் துணையின்றி இங்கு எதையும் சாதிக்க முடியாது. மக்களின் குரலின்றிச் சட்டம் ஏதும் இயற்ற முடியாது. எனவே தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொழுது உங்கள் மொழிக்கொள்கையைத் தனித் தலைப்பிட்டு அறிவியுங்கள். பொருளாதாரத்தைக் காப்பது மட்டும் ஜனநாயகத்தின் கடமை அல்ல; கலாசாரத்தையும் காப்பதுதான்.



Sunday, 23 December 2018

கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால்
மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்
- கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 20ஆம் ஆளுமையாக சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் விழாவுக்குத் தலைமை தாங்கினார். முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

இயற்கை என்ற பெரும்பொருளை மனித வாழ்க்கை என்ற அரும்பொருளோடு ஈராயிரமாண்டுகளுக்கு முன்பே இணைத்தவர் என்று கபிலரைக் கருதலாம். இயற்கை என்பது மனிதனுக்குத் துணைப்பொருளன்று முதற்பொருள் என்ற இலக்கணத்திற்கு இலக்கியம் படைத்தவர் கபிலர்.

இன்று உலகம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது சுற்றுச்சூழல் என்ற கருதுகோள். ஒரு நாட்டின் மொத்தப் பரப்பில் 33 விழுக்காடு காடு வேண்டும் என்று கதறுகிறது ஐ.நா. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் 160கோடியில் இருந்து 650கோடிக்குத் தாவியிருக்கிறது உலக மக்கள்தொகை. ஆனால் அதே காலவெளியில் உலகம் தன் சதுப்புநிலக் காடுகளில் பாதியை இழந்திருக்கிறது. மனிதா இயற்கையை விட்டு எட்டிச் செல்லாதே என்று எச்சரிக்கிறது கபிலர் பாட்டு.

இயற்கைக்கு எதிரான மனிதனின் யுத்தம்தான் உலகத்தை வெப்பமயமாக்கி ஓசோன் கூரையைக் கிழித்திருக்கிறது. புவி வெப்பத்தால் ஒருமணி நேரத்திற்கு ஒரு உயிரினம் அழிந்துகொண்டிருக்கிறது. இன்னும் மூன்று டிகிரி வெப்பம் கூடினால் உலகில் 33 விழுக்காட்டு உயிரினம் அழிந்துபோகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும். விண்ணும் மண்ணும் தங்கள் சமநிலையை இழந்துவிடும்; பருவங்கள் மாறிப்போகும்; துருவங்கள் உருகிப்போகும். காடுகள் அழிந்தால் மலைவளம் குன்றும்; மலைவளம் அழிந்தால் மழைவளம் குன்றும்; மழைவளம் அழிந்தால் நிலவளம் குன்றும்; நிலவளம் அழிந்தால் விளைநிலம் குன்றும். பிறகு வேளாண்மை என்ற நாகரிகத்தை விளைநிலங்களில் புதைக்கவேண்டியிருக்கும்.

விலங்குகளையும் பறவைகளையும் தாவரக் கூட்டங்களையும் மனித வாழ்வோடு கட்டுவிக்கும் ஊடுசரடாகக் கபிலர் இலக்கியம் விளங்குகிறது. கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான்; புல்லை வணங்குவான்.

கபிலர் பாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் இடம்பெற்ற ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ என்ற தொடர் கபிலரிடம் நான் கடன்பெற்றது. கபிலரை இணையதள உலகத்தோடு இணைக்கும் முயற்சிதான் அது.

தமிழர்கள் மத்தியில் பக்தி இலக்கியம் பரவிய அளவுக்குச் சங்க இலக்கியம் பரவவில்லை. பக்தி இலக்கியம் மறுமையோடு தொடர்புடையது; சங்க இலக்கியம் இம்மையோடு தொடர்புடையது. சங்க இலக்கியம் கடினச் சொற்களால் ஆனது என்று கழித்துவிட வேண்டாம். பாறைகளின் இடுக்கில் தேன்கூடு தெரிவதுபோல, கெட்டிப்பட்ட சொற்களுக்கு மத்தியில்தான் கொட்டிக்கிடக்கிறது தமிழர் பண்பாடு.

இளைஞர்களே! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்வின் முகவரி தேடி நகருங்கள். நல்லன கொள்ளுங்கள்; அல்லன தள்ளுங்கள். பாரியின் மரணத்திற்குப் பிறகும் பாரிமகளிரை ஆதரித்தவர் கபிலர். ஒரு தோழனின் வாழ்வோடும் தாழ்வோடும் உடனிருப்பதே உயர்ந்த அறம் என்பதைக் கபிலர் பெருமான் வாழ்வில் கற்றுக்கொள்ளுங்கள்.

Legends honored at Kabilar Tamizhaatrupadai:
https://www.youtube.com/watch?v=Uwc9EWKt0NA

Vairamuthu to speak Kabilar in Tamizhaatrupadai Part 3:
https://www.youtube.com/watch?v=JZrCG0Ja3SA

Vairamuthu to speak Kabilar in Tamizhaatrupadai Part 2:
https://www.youtube.com/watch?v=tQCX9aSdTfc

Vairamuthu to speak Kabilar in Tamizhaatrupadai:
https://www.youtube.com/watch?v=ieDNNUp-eR0

Nakkeeran Gopal Vairamuthu spotted at Tamizhaatrupadai Event
https://www.youtube.com/watch?v=QkfkXXub6bA