Featured post

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம்

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம்  ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் ! மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மால...

Thursday 26 January 2023

பெண்கள் தான் படைப்பு கடவுள்; என் தாயும், மனைவியும் வணங்க வேண்டியவர்கள்!

 *பெண்கள் தான் படைப்பு கடவுள்; என் தாயும், மனைவியும் வணங்க வேண்டியவர்கள்! - நடிகர் சிவகுமார்*


இன்று பரிசு வாங்கிய சண்முகசுந்தரம் (மரபு விதை சேகரிப்பு) நம்மாழ்வார் ரமேஷ் (இயற்கை வேளாண்மை பயிற்சி செய்தவர்) மாலதி ரமேஷ், ரவிக்குமார், மூர்த்தி, (அண்ணா பல்கலைக்கழகம்) பெண்கள் விவசாய கூட்டுறவு குழு இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இறுதியில் பெண்கள் கலக்கி விட்டார்கள். ராஜ்கிரன் கூறியது போல், சக்தி இல்லை என்றால் எதுவுமே இல்லை. நானும் அதைப் பற்றி தான் பேசப் போகிறேன்.


நான் பத்து மாத குழந்தையாக இருக்கும்போது எனது அப்பா இறந்து விட்டார். புகைப்படம் இல்லாததால் அப்பா கருப்பா சிகப்பா என்று தெரியாது. அப்பா இருந்திருந்து அம்மா இறந்திருந்தால் இன்று நான் அனாதையாக இருந்திருப்பேன். இந்த மேடையில் நின்று இருக்க மாட்டேன். சூர்யா கார்த்தி பிறந்திருக்க மாட்டார்கள். உழவன் அறக்கட்டளையும் அகரம் அறக்கட்டளையும் இருந்திருக்காது. பெண்கள் தான் படைப்பு கடவுள். அதில் எந்த குழப்பமும் வேண்டாம். 5000 ஆண்கள் சேர்ந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது. ஒரு ஆண்கள் கூட இல்லாத நிலை வந்தாலும், பெண்களிடம் இருந்து செல்களை எடுத்து குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்கலாம் என்று விவசாயிகள் கூறியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் ஒரு விதவை தாயால் நான் உருவாக்கப்பட்டவன். அப்போது எங்கள் ஊரில் 50 வீடுகள் தான் இருக்கும் அதில் பாதி பெண்கள் விதவையாக தான் இருப்பார்கள். வெள்ளைச்சீலைக்காரிகள் தான் அதிகம். என் நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவை வெள்ளை சீலையோடு தான் பார்த்தேன். ஒரு வெள்ளை சேலைக்காரிக்கு ஒரு கருவை மாடு இருந்தால் இறுதிவரை சோறு போடும் என்பார்கள். அதுபோல் எங்கள் வீட்டில் கறவை மாடுகள் தான் இருந்தது. அதில் வருஷியத்து மாடு என்றால் வருடத்திற்கு ஒரு முறை கன்று போடும். 4 மாதம் பால் கறக்கும். பின்பு கர்ப்பம் தரித்து விடும். சினை என்று கூறினால் அது எங்கள் ஊரில் கெட்ட வார்த்தை. ஆகையால், நாங்கள் மாடு பயிராகி விட்டதா என்று தான் கேட்பார்கள். பயிராகி 2 மாதம் பால் கறக்கும். அதன் பின் அளவு குறைந்து விடும். கன்று போடுவதற்கு இறுதி 4 மாதம் சுத்தமாக பால் நின்று விடும்.


 எங்கள் ஊரில் அடிப்படை வசதியான மின்சாரம், தண்ணீர், கழிவறை மற்றும் பள்ளிக்கூடம் எதுவுமே இருக்காது. அப்போது ஒரு நாள் நடு இரவில் அடைபடை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் எப்போதும் வீட்டிற்கு வரவும் மாட்டோம் வெளியே இருக்கும் தாழ்வாரத்தில் தான் உறங்கும். போர்வைக்கு துப்பிட்டு என்று தான் கூறுவோம். ஆனால், அது குளிர் தாங்காது. ஆகையால், நான் எனது அக்கா மற்றும் அம்மா மூவரும் சாக்குப்பையைக் கொண்டு போர்வையின் மேல் காலில் இருந்து இடுப்பு வரை போர்த்திக் கொள்வோம். அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென்று மின்னல் மின்னியது. அந்த நடு இரவு ஒரு வினாடி நண்பகல் போல வெளிச்சமாக தோன்றி மறைந்தது. அதன்பின் இடி இடிக்கும் சப்தம் நெஞ்சு அதிரும் வகையில் இருந்தது. அப்போது என் அம்மாவின் அம்மா அம்மிச்சி என்று அழைப்போம். அவர், கண்ணு பயப்படாதே! தேவேந்திரன் தேர் ஓட்டிக்கொண்டு செல்கிறான். நமது மீது விழாது, நான் சொல்வதை சொல் என்று கூறினார்.


"பொங்கப்பத்தி புளிய பத்தி ஆத்த பத்தி அரச பத்தி அர்ச்சுனா அர்ச்சுனா" என்று சொல் என்று கூறினார். உங்க பத்தி என்றால் புங்கை மரத்தின் மீது, புலியை பற்றி என்றால் புளிய மரம் மீது, ஆத்த பத்தி என்றால் ஆற்றின் மீது, அரச பத்தி என்றால் அரச மரத்தின் மீது என்று அர்த்தம். இவைகளில் ஏதாவது ஒன்றின் மீது இடி விழ வேண்டும் என்று அர்ஜுனனிடம் கூறினால், அர்ஜுனன் நமது மீது இடியை விழ செய்ய மாட்டார் என்று ஒரு நம்பிக்கை. இதை கூறிக் கொண்டிருக்கும்போது சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தது. பிறகு மாடு கத்த ஆரம்பித்தது. வழக்கமாக அப்படி கத்தாது. என்ன என்று பார்ப்பதற்காக அந்த இருட்டில் லாந்தர் ஏந்திக்கொண்டே எனது அம்மா சென்றார். நானும் பின்னாடியே சென்றேன். மழையில் நனையாமல் இருப்பதற்கு சாக்குப்பையை உள்ளே மடித்து தலையில் போட்டுக் கொண்டால் பொங்காடை என்று பெயர், அதை போட்டுக் கொண்டு சென்றோம். மாடு ஒரு இடத்தில் நிற்காமல் இப்படியும் அப்படியும் நகர்ந்து கொண்டே இருந்தது. எனக்கு ஏழு வயது, என்னவென்று எனக்கு கேட்கத் தெரியாது. நேரத்திற்கு பின்பு அடிப்பகுதியில் நீர் நிரம்பிய பாலித்தீன் கவர் உள்ளே ஒரு ஜீவராசி வந்து விழுந்தது. பனிக்குடம் உடைந்து கன்றின் கண் பளிச்சென்று தெரிந்தது. அடுத்த 3 நிமிடங்களில் தாய் பசு தன் கன்றின் மீது இருந்த அழுக்கை நாவால் நக்கி சுத்தம் செய்தது. பார்க்க பளபளப்பாக இருந்தது. பிறந்து ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை, பாதம் பழகா பிஞ்சு குளம்பால் நான்கு கால்களும் வெவ்வேறு திசையில் செல்ல விழுந்து எழுந்து தட்டு தடுமாறி தொடர் முயற்சியால் எழுந்து நின்றது. பின்பு தாயின் வாயிடம் சென்று, தாடை, முன் கால், அடி வயிறு என்று மெதுவாக சென்று மடியை தேடிப்பிடித்து பால் குடித்தது. விருந்து 10 நிமிடங்களில் தனக்கு தேவையான உணவு எங்கிருக்கிறது என்று தேடி கண்டுபிடித்தது. இதை யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இதன்பின் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பாலை கரும்பு சர்க்கரை சேர்த்து காய்ச்சினால் கெட்டியாகி விடும் அதை சீம்பால் என்று கூறுவார்கள். அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளிலும் கொடுப்பார்கள். இது போன்ற வாழ்க்கை இனிமேல் கிடைக்குமா? அடுத்த பிறவி எடுத்தால் கிராமத்தில் தான் பிறக்க வேண்டும்.


கன்று போட்டு பத்து நாட்களுக்கு பிறகு பால் இயல்பாக ஆகிவிடும். அப்போது சொசைட்டியில் இருந்து எடுத்துச் செல்ல வருவார்கள். இது பற்றி கார்த்தி, கொரோனா காலத்தில் சொசைட்டி கைவிட்ட பிறகும் ஒரு இளைஞன் விவசாயிகளைத் தேடி பாலை வாங்கி வியாபாரம் செய்தார் என்று கூறினார். அப்படியே அந்த பால் கறக்கும் விடியற்காலை வேளையில், கார் சத்தம், பிளைன் சத்தத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அமைதியான வேளையில், அதிகாலையில் நான் முதன்முதலாக 100 சிட்டுக்குருவிகளின் சப்தத்தை கேட்டேன். அடுத்து ஐந்து நிமிடங்களில் சேவல் கூவ ஆரம்பிக்கும்.


அந்த காலத்தில் நாங்கள் இப்போது இருப்பது போல், கிரில் அமைத்து போந்தா கோழிகளை வளர்க்கவில்லை. பாம்பு வந்து லேசாக மூச்சு விட்டாலே கோழி இறந்து விடும். அதற்காக பொடாப்பு என்று கூறுவோம். கல்லிலேயே அமைத்து 6 இன்ச் அளவிற்கு மட்டும் வழி விட்டு கோழிகள் அடைந்ததும், கல்லின் குறுக்கே பலகையை வைத்து எந்த உயிரினமும் உள்ளே போகாதபடி அடைத்து விடுவோம். விடியற்காலை 4 மணிக்கு பலகையின் முன்னே இருக்கும் கல்லை நகர்த்தி பலகையை எடுத்தால் தாய்க்கோழி சேவல் என்று அனைத்தும் அதனதன் வேலையை செய்ய வெளியே வந்துவிடும். பிறகு ஆடு கத்தும். அதையும் வெளியே தெரிந்து விடுவோம். இப்போது பால்காரரின் மணி சத்தம் டிங் டிங் என்று கேட்கும்.


 அப்போது பெண்கள் தான் அதிகம் பால் கறப்பார்கள். மடிக்கு அருகே குத்த வைத்து குதிகாலை தூக்கி உட்கார்ந்து கொண்டு தான் பால் கறப்பார்கள். இரண்டு முழங்காலுக்கு நடுவில் பால் பாத்திரத்தை போசி என்று கூறுவோம். அதை வைத்துக்கொண்டு கறப்பார்கள். முதலில் பாத்திரத்தின் சத்தம் கேட்கும், பால் கொஞ்சம் கொஞ்சமா பாத்திரத்தில் நிறைந்து வர வர நுரைத்துக் கொண்டு சத்தம் கொஞ்சம் அடர்த்தியாக கேட்கும். அப்படி அந்த நுரையுடன் அடுப்பிற்கு கொண்டு போகும் முன், இங்கு எத்தனை பேர் குடித்து இருக்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால், நான் குடித்து இருக்கிறேன். மேல் உதட்டில் மீது மீசை போன்று அந்த நுரை ஒட்டிக் கொள்ளும்.


 மாடு மேய்த்தவன் என்று கூறுவதில் எனக்கு கேவலம் இல்லை. 7 வயதிலிருந்து சுமார் 8 வருடங்கள் சனி ஞாயிறு கிழமைகளில் மாடு மேய்த்து இருக்கிறேன். ஒரு காட்டிருக்கும் இன்னொரு காட்டிருக்கும் இடையில் உள்ள பகுதியில் அருகு (அருகம்புல்) நிறைய இருக்கும். அங்குதான் மாடு மேய்க்கக் கொண்டு செல்வேன். அப்போது மாட்டின் வாய்க்கு மேல் பகுதி கருப்பாக இருக்கும் இரண்டு மூக்கின் வழியே மூக்கணாங் கயிறு கட்டி இருக்கும். மூச்சு சத்தம் புஸ் புஸ் என்று கேட்கும். அதோடு அருகம்புல்லை மென்று திங்கும் சத்தமும் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு ஆசியா கத்தி என்று ஒரு வேர் இருக்கும். நிறைய பேருக்கு அது பற்றி தெரியாது. அதை மாடு தெரியாமல் தின்று விட்டால் மூன்று நாட்களுக்கு பாலில் அந்த வாசனை வரும். இப்படி எல்லாம் தான் நான் வாழ்ந்து வந்தேன்.


 இப்போது டாக்டர் சிவராமன் கூறியது போல, சிறு தானியங்கள் எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்தது. அரிசி சாதமே கிடையாது. கம்பு, சோளம், வரகு, திணை இவைகளை சமைத்து தான் சாப்பிடுவோம். அதில் பெரும்பாலும் முதல் நாள் செய்த சோழ சோறு மீதம் இருக்கும். அடிப்பகுதியில் தீஞ்சு போனதால் சிவந்து இருக்கும் அதை சீவச்சுறு என்று கூறுவோம். அது எடுத்து பாத்திரத்தில் போட்டு தயிரை அதில் ஊற்றுவோம். தயிர் விழாத அளவிற்கு கட்டியாக இருக்கும் இப்போதெல்லாம் அப்படி தயிர் இல்லை. இந்த கெட்டி தயிரை விரல் வைத்து எடுத்து ஊற்றி சாப்பிடுவோம். சனி, ஞாயிறுகளில் கொள்ளு, தட்டை பயிர், பச்சை பயிரை தாளித்து வைத்துக்கொண்டு, பொன்வண்ணன் கூறியது போல மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை வைத்து நேரத்தைக் கணக்கிட்டு சாப்பிட்டு வாழ்ந்த காலம். இவை எல்லாம் சாப்பிட்டு வளர்ந்ததால் தான் என்பது வயதிலும் நான் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.


அதன் பிறகு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இங்கு வந்தேன். எனது அம்மா ஏழு வருடங்கள் வெறும் ராகி கூழை சாப்பிட்டு காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வயலில் வேலை செய்தது நான் முன்னேற வேண்டும் என்பதற்காக தானே?! எதற்காக தான் பட்டணம் வந்து படித்தேன். அந்த ஒத்தை பொம்பளை 32 வருடங்களாக விதவையாக இருந்து என்னை வளர்த்ததால்தான் நான் இங்கு நிற்கிறேன். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவே இருந்தாலும், தாய் இல்லை என்றால் யாரும் இல்லை தாய் தான் கடவுள். அவள் போட்ட பிச்சையால் தான் நான் இங்கு இருக்கிறேன்.


அதன் பின் என் தாய் போலவே என்னுடைய வாழ்க்கை இன்னொரு பொம்பளை இருக்கிறார். நான் தாடி வைத்துக் கொண்டு ஓவியம் வரைந்து கொண்டு கல்யாணம் செய்து கொள்ளாமல் பரதேசியாகவே வாழலாம் என்று இருந்தேன். ஆனால், எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து என் வாழ்க்கையை மாற்றி எனக்கு இரு மகன்களை கொடுத்தார். அவர்களால் அகரம் அறக்கட்டளை மற்றும் உழவன அறக்கட்டளை என்று ஆனது. சாமியாக போனவனை இரண்டு மகன்களை கொடுத்து உருவாக்கி இருக்கிறார்.


அன்று என் தாய் வணங்க வேண்டியவள்; இன்று என் மனைவி வணங்க வேண்டியவள்! என்றார்.

No comments:

Post a Comment