Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Monday, 28 November 2022

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின்

 *இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின்  'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் பிரத்யேக காட்சி*


கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது.


அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி 'தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர்- காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த தொடரில் எஸ்.ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தொடரின் முதன்மையான கதாபாத்திரமான வெலோனி எனும் வேடத்தில் புதுமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் நடிகைகள் லைலா, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.


இந்தியாவில் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு டிஜிட்டல் தளமான பிரைம் வீடியோ, அதில் விரைவில் வெளியாக இருக்கும் அசல் க்ரைம் த்ரில்லர் தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் பிரத்யேக காட்சியை 53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டது.





ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த சர்வதேச திரைப்பட விழாவில் இதன்‌ ஃபர்ஸ்ட் லுக், முன்னோட்டம் போன்றவை திரையிடப்பட்டது. இதனை வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் கண்டு ரசித்து பாராட்டினர்.


வதந்தி என்பதன் பொருளைப் போல.., இந்தத் தொடர் இளமையான மற்றும் அழகான வெலோனியின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதில் அறிமுக நடிகையான சஞ்சனா நேர்த்தியாக நடித்திருக்கிறார். அவரது கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. ஒரு குழப்பமான ஆனால் உறுதியான காவல்துறை அதிகாரியாக எஸ் ஜே சூர்யா தோன்றி, பொய்களின் வலையில் சிக்கி இருப்பதை காண்கிறார். ஆனால் உண்மையை கண்டறிவதில் பேரார்வம் கொண்டவராக இருக்கிறார்.


தொடரின் திரையிடலுக்கு முன்பாக வருகை தந்த பார்வையாளர்களிடம் பேசிய பிரைம் வீடியோவின் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித், '' மதிப்புமிக்க 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எங்களின் அடுத்த தமிழ் ஒரிஜினல் தொடரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடரை வழங்குவது எங்களுக்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆகியவை, சினிமா துறையில் சிறந்து விளங்குவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் இந்திய கதைகளை சர்வதேச பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொள்கிறது. எங்களது இடைவிடாத முயற்சியின் காரணமாக புதிய மற்றும் வளர்ந்து வரும் அனுபவம் மிக்க படைப்பாளிகளுடன் இணைந்து உற்சாகத்துடன் பணியாற்றுகிறோம். அவர்களின் புதிய படைப்புகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவி இருக்கும் பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு சென்றடைய கூடிய வகையில் ஒரு வலிமையான தளத்தை உருவாக்கும் வகையிலும் இயங்கி வருகிறோம். அந்த வகையில் எங்களின் அடுத்த அசல் தொடரான 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடர், மொழி மற்றும் நிலவியல் பின்னணி என அனைத்து தடைகளையும் எளிதாக கடக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் ஹைப்பர் லோக்கல் கதைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். பிரைம் வீடியோவில் மக்களிடம் வேரூன்றிய நம்பிக்கைகளையும், உண்மையான கதைகளையும், எங்களின் உலகளாவிய பார்வையாளர்களிடம் சென்றடைய செய்ய இயலும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.'' என்றார்.


தொடரின் படைப்புத்திறன் மிகு தயாரிப்பாளர்களான புஷ்கர் - காயத்ரி பேசுகையில், '' ஆசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. விரைவில் வெளியாக இருக்கும் எங்களின் அடுத்த படைப்பான 'வதந்தி -தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடரை திரையிடுவது எங்களுக்கு உற்சாகமாக உள்ளது. பிரைம் வீடியோவின் அதன் உலகளாவிய பிரத்யேக காட்சி, இந்திய சர்வதேச திரைப்பட விழா போன்ற ஒரு தளத்தில் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. கிரைம் திரில்லர் ஜானரிலான இந்த தொடரை பரந்த அளவிலான பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல உதவுகிறது. 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடர் ப்ரைம் வீடியோ உடனான எங்களின் இரண்டாவது கூட்டு தயாரிப்பாகும். இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள பார்வையாளர்களுக்காக உள்ளடக்கத்தை உருவாக்கும் பார்வையை பகிர்ந்து கொள்வதால், ஒரு சிறந்த கூட்டாளியை கண்டறிந்திருக்கிறோம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.'' என்றார்.


இந்த தொடரைப் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், '' பிரைம் வீடியோ மூலம் எனது படைப்பை உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். டிசம்பர் இரண்டாம் தேதி அதன் உலகளாவிய வெளியீட்டை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 'யார் செய்திருப்பார்கள்?' என்ற வினாவை மையப்படுத்தி பரபரப்பாக நகரும் இந்த க்ரைம் திரில்லரில், எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருந்தாலும், 'வதந்தி' பற்றிய சிந்தனையை தூண்டும் விசயங்களும் இடம்பெற்றிருக்கிறது. மேலும் இந்த வதந்தி எனும் விசயத்தை பார்வையாளர்களுடன் உணர்வுபூர்வமாக இணைக்கும் வகையிலும் திரைக்கதை அமைந்திருக்கிறது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் பார்வையாளர்களுடனும் இணைப்பை ஏற்படுத்தும். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை கண்டு, அவர்கள் ரசித்து பாராட்டியிருப்பது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் இந்த தருணத்தில் இங்கு இருப்பது உண்மையிலேயே எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக கருதுகிறேன்.'' என்றார்.


இந்த தொடர் குறித்து முன்னணி நட்சத்திர நடிகரான எஸ். ஜே. சூர்யா பேசுகையில், '' என்னுடைய வலைதள தொடர் அறிமுக காட்சிக்காக இந்திய சர்வதேச திரைப்பட விழா நிகழ்வில் நான் கலந்து கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். பார்வையாளர்களின் எதிர் வினைகளை நேரில் காணவும் இங்கே வருகை தந்திருக்கிறேன். புஷ்கர் -காயத்ரி- ஆண்ட்ரூ லூயிஸ் இவர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், சிறந்த நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்புடன் தயாராகி ப்ரைம் வீடியோ மூலம் வெளியாகிறது. டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாவதற்கு இதைவிட சிறந்த வழியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. டிசம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்தத் தொடருக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இந்த தொடரை அதிக அளவிலான பார்வையாளர்கள் காணப் போகிறார்கள் என உறுதியாக நம்புகிறேன். விறுவிறுப்பான மற்றும் உணர்வுபூர்வமான கதை, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் எதிரொலிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.


வெலோனி கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா பேசுகையில், '' என்னுடைய முதல் தொடரான 'வதந்தி -தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'யின் பிரத்யேக காட்சிக்காக கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். மில்லியன் கணக்கானவர்களின் கனவு காணக்கூடிய இந்த வாய்ப்பினை, எனக்கு அளித்ததற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த தொடரின் ஒரு பகுதியாக இருப்பதும் அற்புதமான அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றியதும் கனவு நனவானது போல் இருந்தது. இந்தத் தொடரை அனைவரும் விரும்புவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.'' என்றார்.


அமேசான் ஒரிஜினல் தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடர் டிசம்பர் 2ஆம் தேதி முதல் உலக அளவிலான பார்வையாளர்களுக்காகவும், சந்தாதாரர்களுக்காகவும் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த க்ரைம் திரில்லர் தொடர், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

No comments:

Post a Comment