Featured post

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும்

 *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*  A&P குரூப்ஸ் நிறுவனத்த...

Friday, 13 June 2025

புன்னகை சொன்ன கதை - ஒற்றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்

 *புன்னகை சொன்ன கதை - ஒற்றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்*





சோஷியல் டிராமா வகைமையைச் சேர்ந்த, “புன்னகை சொன்ன கதை” குறும்படத்தை D RAM Films தயாரித்துள்ளது. வடக்கே இருந்து எழும் குரலால் வசீகரிக்கப்பட்டு அடிப்படைவாதியாகும் ஒரு கலாச்சாரக் காவலரின் முயற்சியைத் தங்கள் ஒற்றுமையால் முறியடிக்கின்றனர் கிராம மக்கள். மாய யதார்த்த (Magical Realism)  கூறுகளைக் கொண்டுள்ள இக்குறும்படம், அன்பை முதன்மை அறமென்றும், மக்களின் ஒற்றுமையே சமூக அரணிற்கான வாய்ப்பென்றும் ஒரு வலுவான கருத்தை முன் வைக்கிறது. பாடலாசிரியரும் வசனகர்த்தாவும் நடிகருமான M. ஜெகன் கவிராஜ், இக்குறும்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகியுள்ளார். 


குறும்படத்தைப் பற்றி இயக்குநர் தினேஷ் ராம் கூறுகையில், "சில சமயம், முன்னால் செல்லும் காரின் பின்புற கண்ணாடியின் வழியாக ஒரு  குழந்தை கையை ஆட்டி நம்மைப் பார்த்துக் குதூகலமாகச் சிரிக்கும். அந்த மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்ளும். அன்றைய நாள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டது போலிருக்கும். இப்படி ஆசிர்வாதங்களை வழங்கிக் கொண்டிருந்த காரின் பின்புற கண்ணாடிகளில், சமீப காலமாகக் கோபமான ஆஞ்சநேயரின் படம் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. பின்னால் வருபவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்கும் அவர், அந்த நாள் முழுவதையுமே ஒரு அவஸ்தைக்குள் தள்ளி விடுகிறார். பக்த ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர், சாந்த ஆஞ்சநேயர், பவ்விய ஆஞ்சநேயரைப் போன்ற சாத்வீக ஆஞ்சநேயர்கள் அளித்த ஆசுவாசமும், காரிய சித்திக்கான நம்பிக்கையையும், இந்தக் கோப ஆஞ்சநேயர் அளிக்காமல் மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்தி வருகிறார். சென்னையில் பரவலாகத் தொடங்கிய இந்த அவஸ்தை, தற்போது சின்னஞ்சிறு உட்புற கிராமங்களுக்குச் சென்றாலும் அதிகளவில் துரத்துகிறது. 'சிரிச்ச மாதிரியான அனுமாரை ஏன் ஒட்ட மாட்டேங்கிறாங்க?' என்ற கேள்வி தான், 'புன்னகை சொன்ன கதை' எனும் குறும்படத்திற்கான ஆரம்ப விதை. அக்கேள்விக்கான விடை, போகன் சங்கரின் 'ராமன், எத்தனை ராமனடி!' எனும் கட்டுரையில் கிடைத்தது. நமது ராமரும், அவர்களது ராமரும் ஒன்றல்ல என்ற தெளிவை நாம் இழக்கும்பட்சத்தில், புன்னகையை இழந்த கோபக்கார ஆஞ்சநேயரின் பால் வசீகரிக்கப்படுகிறோம். நமது கண்களில் அடிக்கடி படும் சின்னங்கள் (Symbols), நமது ஆழ்மனதில் மாற்றங்களை (Subconcious influence) ஏற்படுத்த வல்லவை என்கிறது உளவியல். வார்த்தைகளை விட வீரியமிக்கது இத்தகைய புகைப்படங்கள். இவை, நாம் அறியாமலே நமது சுபாவத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும். நம்மை மாற்ற ஒரு முகமோ, ஒரு சின்னமோ, ஒரு குரலோ கூடப் போதுமானதாக இருக்கும். அப்படி மாறாமல், நமது பன்முக அடையாளங்களை இறுகப் பற்றி, நாம் நாமாக இருக்கவேண்டும் என்ற ஐடியாவைக் குறும்படமாக்கிப் பார்க்கும் ஆவல் எழுந்தது.


ஐடியா நன்றாக இருந்தாலும் கூட, அடுத்த கட்ட நகர்வை எடுக்கச் சின்ன தயக்கம் இருந்தது. இயக்கத்தின் அரிச்சுவடியும் தெரியாது. அதனால் என்னையும் இழுத்துக் கொண்டு போய் கரை சேர வல்ல ஜெகன் கவிராஜை அணுகினேன். 'அய்யா உண்டு. ஊரையே ஒன்று கூட்டி தேர் இழுப்பேன். உங்க ஒருவரை இழுக்கிறதா கஷ்டம்?' என முதல் ஆளாக இணைந்து, தேரின் வடம் பிடித்திழுத்துத் தொடங்கி வைத்தார். என் சுமையைக் குறைக்கும் விதமாகத் தேரை இழுக்கும் வேலையைப் படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவாளர் தனசேகர் நாராயணன் எடுத்துக் கொண்டார். அவருக்கு உற்ற துணையாக நின்று, விளாங்காடு எனும் கிராமத்தில் படப்பிடிப்பு நடக்க உதவிய, மறைந்த இணை இயக்குநரான எழுத்தாளர் DJ டேனியல் அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன். அவரின்றி இப்படமில்லை. மாஸ்டர், மஞ்ஞும்மள் பாய்ஸ் முதலிய படங்களில் நடித்த சிவமுருகன்.G பறையிசைக் கலைஞராக மிகச் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். வில்லனின் பிரதான கையாளாகத் திறம்பட நடித்த தமிழ்மாறன், கொதிக்கும் நல்ல வெயிலில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சுபலட்சுமி, தன் அழகான புன்னகையால் குறும்படத்துக்கு அழகை ஏற்படுத்தியிருக்கும் சிறுமி யுக்தா ஆகியோருக்கு நன்றி. சார்பட்டா பரம்பரை, சித்தா முதலிய படங்களில் நடித்துள்ள ராதா G. நற்பவியின் யதார்த்த நடிப்பாலும், குறும்படத்தின் முடிவைத் தனது கணீர் குரலால் உயர்த்தியுள்ள மூத்த நடிகரான K.S.பழனி அவரது அனுபவத்தாலும், உத்தேசித்த இடத்திற்குத் தேரைக் கொண்டு போய் நிறுத்த முடிந்தது. ராம் கதிர்வேலுவின் பின்னணி இசையும், கோவையைச் சேர்ந்த விக்ரமனின் சவுண்ட் டிசைனும் இணைய, கூட்டு முயற்சியின் பலனைப் புன்னகை சொன்ன கதை பெற்றது. தற்போது, சினிமா காலண்டர் எனும் யூ-ட்யூப் சேனலில் குறும்படம் வெளியாகியுள்ளது. பார்வையாளர்களின் மேலான கருத்துகளுக்காக எங்கள் படக்குழு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார்.


புன்னகை சொன்ன கதை குறும்படத்தை சினிமா காலண்டர் யூ-ட்யூப் சேனலில் காணலாம்.


புன்னகை சொன்ன கதை - https://youtu.be/bSnHFjZxAVk 


போகன் சங்கரின் ‘ராமன், எத்தனை ராமனடி?’ - http://bit.ly/3TmCr5u

No comments:

Post a Comment