*“இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது” ; த்ரிகண்டா’ விழாவில் இயக்குநர் ஹாரூண் பேச்சு*
*தயாரிப்பாளர்களே படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையிடலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை - இயக்குநர் கேபிள் சங்கர்*
*தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தே மோசடி நடக்குது ; ‘த்ரிகண்டா’ விழாவில் உண்மையை அம்பலப்படுத்திய இயக்குநர் கேபிள் சங்கர்*
*“மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு*
SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் & ஷாஜித் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது, “படத்தின் டைட்டிலைப் பார்த்தபோது ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தால் ட்ரைலரை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இவர்கள் செய்திருக்கும் செலவு நன்றாகவே தெரிகிறது. அதுவே இந்த படம் ஒரு கமர்சியல் படமாக வரும் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது. டிசம்பர் மாதம் என்பதால் இந்த வருடம் தமிழ் சினிமா எப்படி இருந்தது, லாபம் எவ்வளவு நட்டம் எவ்வளவு என ஒரு விவாதம் அனைவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வருடம் தமிழ் சினிமா நன்றாகவே இருந்தது. நிறைய சிறு முதலீட்டு படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக மாறிய நிகழ்வு இந்த வருடம் நிறைய நடந்திருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் சிறை திரைப்படம் கூட சின்ன பட்ஜெட்டில் உருவானது என்றாலும் வெளியாவதற்கு முன்பே அதன் அனைத்து உரிமைகளும் நல்ல விலைக்கு விற்றுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்திருக்கின்றன.
ஹவுஸ் மேட்ஸ், மிடில் கிளாஸ், ஆரோமலே போன்ற சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துக் கொடுத்திருக்கின்றன. இது பாராட்டத்தக்க விஷயம் தான். இப்படி இருக்கின்ற நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் போன்ற அனுபவம் மிக்க ஆட்கள் சினிமா நன்றாக இல்லை, நடிகர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் அவர் சொல்வது போல இல்லாமல் அனைத்து நடிகர்களும் குறைந்தது நான்கு படங்களாவது பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டரில் கூட்டம் வருகின்ற படம் மட்டும்தான் வெற்றி படம் என்று சொல்ல முடியாது. தயாரிப்பாளர் போட்ட முதலீடு அவருக்கு திரும்பி கிடைத்து விட்டாலே அது வெற்றி படம் தான். வாராவாரம் காந்தாரா போன்ற படங்கள் வெளியாக முடியுமா என்ன ? சின்ன சின்ன படங்கள் வரத்தான் செய்யும். அதற்கான வசூலை பெறத்தான் செய்யும். சினிமா நன்றாக இருக்கிறது. சந்தோஷமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுங்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை தெலுங்கு சினிமாவில் இது போன்ற மித்தாலஜிக்கல் படங்களை மிக அட்டகாசமாக எடுப்பார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. சுவாரசியமாக இருக்கிறது. மகேந்திரனுக்கு இது ஒரு திருப்புமுனை கொடுக்கும் படமாக இருக்கும். கியூப்பும் UFOவும் தாங்களே தனி ஆளுமை பண்ண கூடாது என்பதற்காக அவர்களுக்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களே தங்களது படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கொடுத்து திரையிட சொல்லலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை. இதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை சரியாக செய்து விட்டால் சின்ன பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில் மிகப்பெரிய செலவு இருக்காது என தெரிகிறது” என்று பேசினார்.
இசையமைப்பாளர் ஷாஜித் பேசும்போது, “இந்த படத்தில் முதலில் ஹர்ஷவர்தன் சார் தான் இசையமைப்பாளராக இருந்தார். அவர் ரொம்பவே பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் முழு நேரமாக செயல்பட முடியவில்லை. இயக்குநர் மணி என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை கொடுத்தார். நான் கேரளாவை சேர்ந்தவன். ஆனால் இங்கே சென்னையில் தங்கியிருக்கிறேன். தெலுங்கு படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். மித்தாலஜிக்கல், ஹாரர், த்ரில்லர் என பல ஜானர்கள் இந்த ஒரே படத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த படத்தில் பயணித்தது மிக சவாலாக இருந்தது. படத்தின் உருவாக்கம், படத்தொகுப்பு எல்லாமே எனக்கு முதலில் புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்தது. மகேந்திரன் மட்டுமல்ல கதாநாயகி சாஹிதியும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் இசைப் பணியில் எனது மனைவியும் ரொம்பவே உறுதுணையாக இருந்தார்” என்று பேசினார்.
குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சஞ்சய் பேசும்போது, “இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். என் மீது முழு நம்பிக்கை வைத்து இயக்குநர் கொடுத்துள்ளார்” என்று பேசினார்.
படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் பேசும்போது, “தெலுங்கில் நான் மூன்று படங்கள் தயாரித்துள்ளேன். தமிழில் இது எனது முதல் படம். தமிழில் இதை ஏன் தயாரித்திருக்கிறேன் என்றால் குமரிக்கண்டம், பழமையான தமிழர்கள் என இது முழுக்க தமிழுக்கான கதை. இந்த படத்தை துவக்கும்போதே நல்ல மனிதர்கள் இதில் இணைய வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இயக்குநர் மணி உள்ளே வந்தார். அனைவரும் இதில் வந்தார்கள். நாம் நல்ல கதையை தேர்வு செய்யும்போது, மக்கள் அதை பார்க்க முன்வருவார்கள்.. கடந்த வருடத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதில் அதிகப்படியான வசூலை கொண்டு வந்தது சின்ன பட்ஜெட் படங்கள் தான். மகேந்திரனை இந்த படத்தின் கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு காரணம் அவரை எல்லா மொழியில் இருப்பவர்களுக்கும் நன்கு தெரிகிறது. அவர் ஒரு சவுத் இந்தியன் ஸ்டார்” என்று பேசினார்.
நடிகர் கல்லூரி வினோத் பேசும்போது, “மகேந்திரன் எனக்கு நெருக்கமான நண்பர். அவர் முதலில் கதாநாயகனாக நடித்த விழா திரைப்படத்தில் நானும் நடித்திருந்தேன். நாமெல்லாம் பள்ளிக்கூடம் படிக்கப்போன காலத்தில் மகி அவரது தந்தையுடன் நடிக்க போய்க் கொண்டிருந்தார். இந்த படத்தில் அவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளருக்கு நிச்சயம் இந்த படம் லாபத்தை தரும். இந்த படம் வெளியான பிறகு இயக்குநர் மணிக்கு நிறைய படங்கள் தேடி வரும்” என்று பேசினார்.
கதாநாயகி சாஹிதி அவான்ஷா பேசும்போது, “த்ரிக்கண்டா படம் பவர்ஃபுல் மித்தாலஜி, சைக்காலஜி, ஆக்சன், அற்புதமான விசுவல்ஸ் என எல்லாவற்றையும் உள்ளடக்கி உள்ளது. தமிழ் சினிமா தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு எப்படி திரில்லிங்காக இருந்ததோ படம் பார்க்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படும்” என்று பேசினார்.
நாயகன் மகேந்திரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். மாஸ்டர் படம் எனக்கு தெலுங்கில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சிறு வயதில் நடித்தபோது நான் தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்தேன். எனக்கு அங்கே நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி தெலுங்கில் நல்ல படம் நடிக்கலாம் என நினைத்தபோது தான் இயக்குனர் மணியை சந்தித்தேன். இந்த படம் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம். ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்குப் பிறகும் அதை போட்டு பார்த்துவிட்டு இன்னும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என இயக்குனரும் தயாரிப்பாளரும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அந்த கஷ்டத்திற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி எதிர்பார்த்த ஒரு தெலுங்கு படமாக இந்த படம் இருக்கிறது.
மாஸ்டர் சஞ்சய் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நானே ஒரு குழந்தை நட்சத்திரம், என் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடித்திருப்பதை பார்க்க எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதேபோல சஞ்சய்க்கும் இந்த சினிமா நிறைய கொடுக்கும். நாட்டாமை படத்தில் கே.எஸ் ரவிக்குமார் எனக்கு மாஸ்டர் மகேந்திரன் என்று பெயர் வைத்தார். எத்தனை காலத்திற்கு இப்படி மாஸ்டர் மகேந்திரன் என்கிற பெயரே தொடரும் என்று நினைத்தபோது ஒரு யுனிவர்ஸ் போல லோகேஷ், விஜய் அண்ணா கூட்டணியில் மாஸ்டர் என்கிற படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் என் பெயருக்கும் அது பொருத்தமாக அமைந்துவிட்டது. எனக்கு அது பெருமையான விஷயம் தான். மகேந்திரன் என்று சொன்னால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது” என்று பேசினார்.
இயக்குனர் ஹாரூண் பேசும்போது, “தெலுங்கிலேயே நிறைய கதைகள் இருக்கும்போது, தமிழை தேடி வந்ததற்காக தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026 நிச்சயமாக நல்ல வருடமாக இருக்கும். ஏனென்றால் இனிமேல் நல்ல கதைகள் வரும். நல்ல கதை தான் ஹீரோ. இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுவது ட்ரைலர்கள் தான். நல்ல படம் பண்ணியிருக்கிறோம் என்று நீங்கள் பெருமையுடன் சொல்லலாம். படங்களின் பட்ஜெட்டை பொறுத்து சாதாரண இடத்திலோ, சத்யம் தியேட்டரிலோ, பீனிக்ஸ் மாலிலோ கூட விழா நடத்தலாம். ஆனால் எல்லா படத்திற்கும் கியூப் கட்டணம் என்பது ஒன்றாக தான் இருக்கிறது. இதை யார் பேசுவார்கள் என்று தெரியவில்லை” என்று பேசினார்.
இயக்குநர் மணி தெலக்குட்டி பேசும்போது, “இந்த படத்தை தமிழில் எடுக்க சென்னையில் முழுக்க ஆதரவு கொடுத்தது மகேந்திரன் தான். குமரிக்கண்டம் பகுதியில் கதை நடப்பது போல இதை ஒரு புனைவு கதையாக உருவாக்கியிருக்கிறேன். இந்த டைட்டில் ஏன் வைத்தோம் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். மெகா ஸ்டார், பவர் ஸ்டார் போல மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” என்று கூறினார்.










No comments:
Post a Comment